குபேரா திரைப்படம் எப்படி இருக்கிறது?

20 ஆனி 2025 வெள்ளி 13:37 | பார்வைகள் : 203
பணக்காரன் - ஏழை ஆகிய நேர் எதிர் கதாபாத்திரங்களை கொண்டு, நாட்டின் வளம் எப்படி தனியார் மயமாக்கப்படுகிறது. அதற்குப் பின்னணியில் இருப்பவர்கள், ஆதாயம் என்ன, பணக் கைமாற்றம் நடக்கும் விதம், அதற்காக அவர்களால் பலிக்கொடுக்கப்படும் நபர்கள் ஆகியவற்றை காட்சிகளால் விவரித்துள்ளார் இயக்குனர் சேகர் கமுல.
தனுஷை தங்களின் சுயநலத்திற்காக வில்லன் ஆட்கள் அழைத்துச் செல்லும் இடத்தில் இனி கதை சூடுப்பிடிக்கிறது என படம் பார்ப்பவர்களை நிமிர்ந்து அமர செய்கிறது. ஆனால் அதற்கு எதிர்மறையாக கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. இங்கு ஒன்று அங்கு ஒன்றும் என ஒரிரு காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கின்றன. மற்றப்படி நீளமான முதல்பாதி ஓகே ரகமாக முடிகிறது.
இரண்டாம் பாதி முதல் பாதியை விட மெதுவாக நகர்கிறது. இந்தக் கதையை ஏழ்மையின் அருகில் இருந்து எதார்த்தத்துடன் சொல்கிறோம் என்ற எண்ணத்தில் கதையை நாசம் செய்துவிட்டனர். தனுஷின் பயணம், எளிதில் காட்சிகளில் வரும்படி உடல்களை எரிக்க முடியுமா? என்ற பல கேள்விகள் உள்ளன. அதேபோல் அந்தக் காட்சிகள் பெரிய தாக்கத்தையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தவில்லை.
நடிகர்களைப் பொறுத்தவரை தனுஷ், நாகர்ஜூனா ஆகியோர் சிறப்பாக தங்களுடைய கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்துள்ளனர். அதுவும் தனுஷ் ஒரு யாசகம் கேட்பவராகவே மாறி காட்சியளிக்கிறார். நாங்களும் மனிதர்கள்தான், நாங்கள் இங்கு வாழ கூடாதா என்று கேட்கும் இடத்தில் ஒருவித சோகத்தை ஏற்படுத்துகிறார். ராஷ்மிகா கதாபாத்திரம் ஒரே ஒரு காட்சிக்காக உருவாக்கப்பட்டள்ளது. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஒளிப்பதிவு, இசை அனைத்தும் ஓகே ரகம்.
ஒரு சிறப்பான கதை, அதை பக்கா சினிமாவாகவும், தனுஷ் - கதாபாத்திரங்கள் ஒரு போட்டியுடனும், க்ளவராகவும் செயல்படும் வகையில் எடுத்திருந்தால் லக்கி பாஸ்கர் போல் குபேராவும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும். ஆனால் யாசகர்களின் வாழ்க்கையும், வலியையும் இயல்பு மீறாமல் எடுக்கிறோம் என்று சொதப்பி பெரும் வெற்றியை தவறவிட்டுள்ளார்களே என்று தோன்ற வைக்கிறது. ஒட்டுமொத்தத்தில் குபேரா கோடிஸ்வரன் ஆகாமல் ஏழ்மையிலேயே வட்டமடிக்கிறது.