Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

28 வைகாசி 2025 புதன் 05:34 | பார்வைகள் : 589


தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்'' என மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பூமி பூஜைக்கு பின் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் 'குன்றம் காக்க... கோவிலை காக்க' என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22ம் தேதி நடைபெறுகிறது.

அதற்கான அடிக்கல் பூமி பூஜை மதுரை வண்டியூரில் இன்று (மே 28) நடந்தது. தொடக்கத்தில் கோ பூஜை நடந்தது. விழாவில் அமைக்கப்பட்ட மாநாடு கட்டமைப்பின் மாதிரியை பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

பின்னர் 6:58 மணிக்கு தொடங்கிய பூமி பூஜையில் முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க.,வை வீழ்த்த த.வெ.க., உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விஜய் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கூறிய கருத்தை வரவேற்கிறேன்.

தமிழ் கடவுள் முருகனுக்கு நடைபெறும் மாநாட்டில் ஒரு வாரம் முன்பு அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே அரசு ஒரு மாநாடு நடத்தியது. ஆனால் இந்த மாநாடு முழுமையான பக்தி உள்ள மாநாடாக அமையும்.

மலேசியா, சிங்கப்பூரில் இருந்து பக்தர்கள் வருவர். இது முழுக்க முழுக்க பக்தி மாநாடு. இதில் அரசியல் கிடையாது. பக்தர்களுக்காக நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

5 லட்சம் மக்கள் வருவார்கள்

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கூறியதாவது: ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டிற்கு 5 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஹிந்து அமைப்பினர், மடாதிபதிகள், கலைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக துணை முதல்வர் பவண் கல்யாண், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசம் பாடிய சென்னிமலைக்கு ஒரு பிரச்னை வரும் போது ஏற்பட்ட எழுச்சியின் வெளிப்பாடு தான் தற்போது நடக்கும் மாநாடு. இதற்கிடையில் திருப்பரங்குன்றத்தில் ஒரு எழுச்சி வந்தது.

எல்லா பகுதிகளிலும் முருகருக்கு வேல் வழிபாடு நடத்தப்படுகிறது. மாநாடு மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு நிறைவடையும். தற்போது தேசியக்கொடி ஏந்தி பேரணி செல்ல அரசு தடை விதிக்கிறது. அதற்கெல்லாம் இந்த மாநாடு பதில் சொல்லும்,என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்