Paristamil Navigation Paristamil advert login

ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும்; ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும்; ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

29 வைகாசி 2025 வியாழன் 07:18 | பார்வைகள் : 729


நாட்டில் புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்,'' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கடப்பா மாவட்டத்தில், தெலுங்கு தேசம் துவங்கி, 43 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மூன்று நாள் மாநாடு நேற்று துவங்கியது.

இதில் பங்கேற்று, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும், மக்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி, தெலுங்கு தேசம் தான். தற்போது, மத்திய அரசு எடுக்கும் பல்வேறு முடிவுகளில், நம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோமோ, அதை அடுத்த நாளே மற்ற மாநிலங்களும் செய்கின்றன.

அனைத்து துறைகளிலும் நாட்டுக்கே முன்னுதாரணமாக ஆந்திரா விளங்குகிறது. வளர்ச்சி, மேம்பாடு, சீர்திருத்தம் ஆகியவற்றை தாரக மந்திரமாக வைத்து, நாங்கள் செயலாற்றி வருகிறோம். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க, 500 - 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும்படி, கடந்த காலத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன்.

கடந்த 2016ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற மத்திய அரசு, புதிதாக 500 - 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இதில், 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை. தற்போதைய நவீன தொழில்நுட்ப கட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து விட்டன. எங்கு பார்த்தாலும், ஆன்லைனிலேயே பணப் பரிமாற்றம் நடக்கிறது.

இதனால், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு அவசியம் ஏற்படவில்லை. இதை கருதி, புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இது அரசியலுக்கு நிச்சயம் பயனளிக்கும். கருப்பு பணத்தை ஊக்குவிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்