வரவுசெலவுத்திட்டத்தில் சேமிக்க சமூகநலக்கொடுப்பனவை குறைக்கலாம்... - பொதுமக்கள் ஆதரவு!!
.jpg)
29 வைகாசி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 2807
அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் 40 பில்லியன் யூரோக்களை சேமிப்பதற்குரிய திட்டமிடல்களை அரசு மேற்கொண்டு வருகிறது. வரும் ஜூலை 14 ஆம் திகதிக்குள் வரவுசெலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பற்றாக்குறையை சமாளிக்க சமூகநலக்கொடுப்பனவுகளைக் குறைக்கலாம் எனும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
59% சதவீதமான மக்கள் ஆதரவும், 41% சதவீதமானவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வீடு பெற்றுக்கொள்ள வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, முதியோருக்கான ஒற்றுமை உதவித்தொகை, 18-24 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான கொடுப்பனவுகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றினை குறைக்க முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
◉ அதேவேளை, 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி 29.9 பில்லியன் யூரோக்கள் சமூகநலக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதில் 12.3 பில்லியன் யூரோக்கள் மட்டுமே செலவிடப்பட்டிருந்ததாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கருத்துக்கணிப்பினை CSA கருத்துக்கணிப்பு நிறுவனம், CNEWS, JDD மற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் பங்கேற்றிருந்தனர். மே 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.