மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி ?

29 வைகாசி 2025 வியாழன் 13:52 | பார்வைகள் : 770
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றார். சமீபகாலமாக வில்லனாக நடிப்பதை ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த வகையில் இவருடைய 50வது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த மே 23ஆம் தேதி ஏஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது தவிர ட்ரெயின், பிசாசு, காந்தி டாக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
அதே சமயம் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இதற்கிடையில் இவர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ஆகையினால் இனி வரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.