Paristamil Navigation Paristamil advert login

அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்: மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு

அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்: மகன் மீது தந்தை ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு

29 வைகாசி 2025 வியாழன் 15:18 | பார்வைகள் : 449


அன்புமணி- ராமதாஸ் இடையே மோதல் போக்கு வெடித்தது. '35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்குப் பின், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, பனிப்போர் நீடித்து வந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில், அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார். இதன் பிறகு ராமதாஸ் நடத்தும் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்து வருகிறார்.

கடந்த மே 24ம் தேதி, “பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை” என தலைவர் பதவி நீக்கம் குறித்து பா.ம.க., தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் நான் என்ன தவறு செய்தேன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தவறு செய்து விட்டேன்

இது தொடர்பாக இன்று(மே 29) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:

தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை 35 வயதில், என்னுடைய சத்தியத்தையும் மீறி, மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்து விட்டேன்.

குற்றவாளி ஆக்கிவிட்டார்

என்ன தவறு செய்தேன் என்று மக்கள் மத்தியில் கேள்வி கேட்டு, என்னை குற்றவாளி ஆக்கிவிட்டார். நான் அவருக்கு பதில் சொல்லி தானே ஆக வேண்டும். அன்புமணியின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல். என்னை குற்றவாளி ஆக்கி அன்புமணி அனுதாபம் தேடப் பார்க்கிறார்.

மேடை நாகரிகம்

ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்த விரும்புகிறேன். புதுச்சேரி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று உலகமே பார்த்தது. மேடை நாகரிகத்தை கடைபிடிக்காது யார்? மேடையில் காலை ஆட்டிக்கொண்டிருந்தது சரியா?

கட்டுக்கோப்பாக நடத்தி வந்த கட்சியை அன்புமணி அவமானப்படுத்தி விட்டார். தலைமை பண்பு அன்பு அன்புமணிக்கு கொஞ்சம் கூட இல்லை. வளர்த்த கிடாவே எனது மார்பில் எட்டி உதைத்துவிட்டது. அன்புமணி செயல் சரியானதா? தவறு செய்த அன்புமணி பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது.

பக்குவம் இல்லை


தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடத் தொடங்கியது அன்புமணி தான். அழகான கட்சியை உடைத்தது யார்? அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என்று அனைவரும் தெரிவித்துள்ளனர். அழகான, ஆளுயர கண்ணாடி ஆன கட்சியை ஒரு நொடியில் அன்புமணி உடைத்து விட்டார். முகுந்தன் நியமன விவகாரத்தில் தனது தாயை பாட்டிலில் வீசி அன்புமணி தாக்கினார்.

திசை திருப்ப முயற்சி

கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்துள்ளார் அன்புமணி; மேடையில் மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக மேசையில் வீசினார்; மக்களையும், கட்சியினரையும் திசை திருப்ப முயல்கிறார்.

பொய் பேசுகிறார்


கட்சியினரிடம் பனையூர் அலுவலகத்தில் வந்து பாருங்கள் என்று அன்புமணி கூறியது சரியா? 4 சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? யார் உழைத்த கட்சி பா.ம.க., யார் யாருக்கு உத்தரவிடுவது. பொய்யை அன்புமணி மூச்சு விடாமல் பேசுவார். கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்து அன்புமணி நிர்வாகிகளை வராமல் தடுத்துவிட்டார்.

அன்றே நான் செத்து விட்டேன். என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராமதாஸ் எடுக்கப் போகிறார் என்று அன்புமணி பொய் சொன்னார். அன்புமணி கூறிய பொய்யை நம்பி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. 8 பேர் தான் வந்தனர்.

எனக்கு விருப்பம் இல்லாமல் எல்லோரும் சேர்ந்து அன்புமணிக்கு பதவி கொடுத்தனர். எல்லா சத்தியங்களையும் அவர் மீறிவிட்டார். நான் எந்த காலத்திலும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என்ற அந்த சத்தியம் இன்றைக்கும் உள்ளது.அந்த சத்தியம் என்றைக்கும் இருக்கும்.

இதுவே தீர்வு

இப்போது ஒன்றும் இவ்லை.. ஒரே தீர்வு என்றால் அப்பா என்று சொல்ல வேண்டாம், அய்யா என்றும் சொல்ல வேண்டாம். நிறுவனர் கொடுத்த செயல் தலைவர் பதவியை மகிழ்வுடன் ஏற்று ஒரு சுற்று சுற்று வந்து செயல்படுவேன் என்று சொல்லலாம். செயல் தலைவராக இல்லாமல் ஒரு தொண்டனாக இருந்து செயல்படுவேன் என்று சொல்லிவிட்டால் பிரச்னை முடிந்தது. இதுதான் தீர்வு.

கைப்பட எழுதினேன்

கண்ணாடியும் உடையல,பிளவும் ஏற்படவில்லை. எல்லாம் முடிந்தது. தீர்வு இதுதான். இப்போது நடந்த தேர்தலில் நான் அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று இவருக்கு ஒரு கடிதம் டைப் பண்ணி, அந்த கடிதத்தின் கடைசியில் நீயே எடப்பாடியிடம் பேசு என்று நானே கைப்பட எழுதினேன்.

ஜெயித்திருப்போம்

அதே போன்று எடப்பாடியிடம் அன்புமணி பேசினார். எடப்பாடியும் சி.வி. சண்முகத்திடம் சொல்லி சரிப்பா... அவர் சொல்வது மாதிரி பண்ணிடு என்றார். ஆனால் அன்று பா.ஜ.,உடன் கூட்டணி போகணும் என்று சொல்லி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி போகக்கூடாது என்றார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி போயிருந்தால் குறைந்தது நாங்கள் ஒரு 3 இடம் ஜெயித்திருப்போம். அதிமுக 6 அல்லது 7 இடம் ஜெயித்திருப்பார்கள்.

அழுத அன்புமணி, சவுமியா

எங்களுக்கு சின்னம் கிடைத்திருக்கும். இதுதான் இயற்கையான கூட்டணி. ஆரம்ப காலத்தில் இருந்து இப்படித்தான். ஆனால் இந்த காலை அன்புமணி, அந்த பக்கம் அன்புமணி மனைவி சவுமியா பிடித்து இரண்டு பேரும் அழுகின்றனர்.

உதிர்ந்த முத்து

அப்போது அன்புமணி வாயில் இருந்து உதிர்ந்த முத்துகள் என்று சொல்வார்களே அது உதிர்ந்தது. இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வில்லை என்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்றார்.

விருந்து

பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற ஏற்பாட்டை சவுமியா செய்து விட்டார். அண்ணாமலையுடன் பேசி செய்துவிட்டார். மறுநாள் காலையில் பார்த்தால் வாசலில் பாரத் மாதா கீ ஜே என்று கேட்கிறது. பார்த்தால் அண்ணாமலை வந்துவிட்டார். சாப்பாடு, விருந்து எல்லாம் காலையில் நடக்கிறது.

கதைகள் உண்டு

எனக்கு தெரியாமலே நடந்தது. அது, இது என்று பல கதைகள் இருக்கிறது. வேட்பாளர் தேர்வு எல்லாம் இருக்கிறது. அது எல்லாம் இப்போது தேவையில்லை.இவ்வாறு ராமதாஸ் பேட்டி அளித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்