மெக்ஸிகன் இரசாயனவியலாளர்கள் பிரான்சில் போதைமருந்து தயாரிப்பு! நியூசிலாந்துக்கு ஏற்றுமதி!

29 வைகாசி 2025 வியாழன் 22:49 | பார்வைகள் : 1169
2024ல், மெக்ஸிகோவில் உள்ள சக்திவாய்ந்த சினலோவா போதைப்பொருள் கும்பல் (cartel mexicain Sinaloa), செயற்கை போதைமருந்துகள் தயாரிக்க மெக்ஸிகன் இரசாயனவியலாளர்களை பிரான்சின் துலோன் (Toulon) பகுதி அருகே அனுப்பியுள்ளது என மே 29ஆம் தேதி தேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அவர்கள் பிரான்ஸில் ஆய்வுக்கூடம் அமைத்து நூற்றுக்கணக்கான கிலோகிராம் மெதாம்பெட்டமின் (méthamphétamine) எனும் போதைப்பொருளை தயாரித்துள்ளனர். இந்த வழக்கில் சுமார் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யும் நேரத்தில், மெக்ஸிகன் இரசாயனவியலாளர்கள் பிரான்ஸை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.
விசாரணையில், இந்த செயற்கை போதைப்பொருள் வலையமைப்பின் தலைமை பெல்ஜியத்தில் இருந்த மெக்ஸிகன் வம்சாவளியினரிடமும், வார் பகுதியில் இரண்டு பிரான்சியர்களிடமும் இருந்தது. தயாரிக்கப்பட்ட மெதாம்பெட்டமின் போதைப்பொருள் நியூசிலாந்து வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரான்சியர்கள் முந்தைய போதைப்பொருள் வழக்குகளிலும் தொடர்புடையவர்கள். போதை மருந்து தயாரிக்க தேவையான பொருட்களை சிறிய சட்டபூர்வ நிறுவனங்கள் மூலமாக வாங்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் பல தொழில் அதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்ற அமைப்பு பிரான்சில் இருப்பது முதன்முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என மார்செய் தேடல் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.