கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய மழை - மரங்கள் முறிந்து விழுந்து கடும் சேதம்

30 வைகாசி 2025 வெள்ளி 06:53 | பார்வைகள் : 524
கொழும்பில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால் சில இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலையும் கொழும்பில் பலத்த காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றது. இதனால் பொது மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.