பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு

30 வைகாசி 2025 வெள்ளி 11:05 | பார்வைகள் : 713
பயங்கரவாதிகளுக்கு பயிற்சியைத் தொடர பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இது மோசமான செயல்' என கொலம்பியாவில் சசி தரூர் பேசுகையில் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம். பி., சசி தரூர் தலைமையில் பா.ஜ., தெலுங்கு தேசம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் குழு, அமெரிக்கா, கயானா, பனாமா நாடுகளுக்கு சென்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கி வருகிறது.
கொலம்பியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில், சசி தரூர் தலைமையான குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொலம்பியாவில் பார்லிமென்ட் உறுப்பினர்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர்.
பின்னர் சசிதரூர் பேசியதாவது: கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக இந்தியா ஏராளமான தாக்குதல்களைச் சந்தித்தது. இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானைத் தாக்கிய பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்த கொலம்பிய அரசாங்கத்தின் எதிர்வினையில் நாங்கள் சற்று ஏமாற்றமடைந்தோம். பயங்கரவாதிகளுக்கு பயிற்சியைத் தொடர பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. இது மோசமான செயல்.
பாகிஸ்தானில் பயங்கரவாதி ஒருவரின் இறுதிச் சடங்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த இறுதிச் சடங்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த சீருடை அணிந்த மூத்த ராணுவ மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். குற்றங்களைச் செய்யும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குகின்றனர்.
பாகிஸ்தானின் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களிலும் 81 சதவீதத்தை சீனா வழங்குகிறது என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். பாதுகாப்பு என்பது ஒரு கண்ணியமானவை ஆகும். பாகிஸ்தான் ராணுவ உபகரணங்களில் பெரும்பாலானவை பாதுகாப்பிற்காக உபயோகப்படுத்தவில்லை. பயங்கரவாத தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா போரில் ஆர்வம் காட்டவில்லை. பயங்கரவாதத் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் அவர்கள் நிறுத்தினால், நாங்கள் நிறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.