தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை

30 வைகாசி 2025 வெள்ளி 12:05 | பார்வைகள் : 1149
நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அண்மையில் தங்க நகைகள் மீதான கடன்களை வழங்கும் விதிகளில் ரிசர்வ வங்கி மாற்றம் செய்தது. பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய நடைமுறைகள் நடுத்தர தரப்பு மக்களை கடுமையாக பாதிக்கும் என்று அதிருப்தி குரல்கள் எழுந்தன.
தங்க நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சிகள், நகைக்கடன் நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
அதன் முதல்படி நிலையாக, ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. முக்கிய கட்டமாக, சிறுதங்க நகை கடன் பெறுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிதி அமைச்சகம், கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது.
புதிய விதிகளை அமல்படுத்த சிறிது அவகாசம் வழங்கி ஜன.1, 2026 முதல் செயல்படுத்தலாம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்து உள்ளது.