வடகொரிய ஆயுதங்களால் சின்னாபின்னமாகும் உக்ரைன் நகரங்கள்...

30 வைகாசி 2025 வெள்ளி 11:02 | பார்வைகள் : 603
உக்ரைனில் முக்கியமான பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தவும், முழு நகரங்களையும் சின்னாபின்னமாக்கவும் ரஷ்யப் படைகள் வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில் இது அம்பலமாகியுள்ளது. அத்துடன் இது வடகொரியாவை ரஷ்யா எந்த அளவிற்குச் சார்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பா, அமெரிக்காம் ஜப்பான் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட 11 நாடுகளின் உறுப்பினர்கள் குழு முன்னெடுத்த ஆய்வில், 2023 செப்டம்பர் தொடங்கி இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட வெடிமருந்து கொள்கலன்களை வடகொரியா ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் தீர்மானங்களால் தடைசெய்யப்பட்ட எண்ணற்ற சட்டவிரோத செயல்களில் வட கொரியாவும் ரஷ்யாவும் ஈடுபட்டதன் ஆதாரங்களையும் இந்தக் குழு திரட்டியுள்ளது.
2024 ஜூன் மாதம் வடகொரியாவின் கிம் ஜோங் உன் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் புடின் என இருவரும் தாக்குதல் நடந்தால் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய உறுதியளிக்கும் ஒரு விரிவான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வட கொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஒன்பது மில்லியன் சுற்று பீரங்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
மட்டுமின்றி, உக்ரேனிய நகரங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை அதிகரிக்கும் ரஷ்யாவின் திறனுக்கு வட கொரியாவும் பங்களித்தது என குறிப்பிட்டுள்ளனர்.
வெளியான அறிக்கையில், செப்டம்பர் 2023 முதல் ரஷ்யாவிற்கு வெடிமருந்துகளை அனுப்பத் தொடங்கியதிலிருந்து,
வடகொரியா குறைந்தது 100 பாலிஸ்டிக் ஏவுகணைகள், சுயமாக இயக்கப்படும் பீரங்கித் துப்பாக்கிகள், நீண்ட தூர பல ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது.
ரஷ்யாவிற்கான ஆயுதங்களை வடகொரியா கடல், வான் மற்றும் ரயில் வழியாக அனுப்பி வருகிறது. பதிலுக்கு, வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மின்னணு போர் அமைப்புகளையும் வட கொரியாவிற்கு ரஷ்யா வழங்கியது.
அத்துடன் உக்ரைனுக்கு எதிராக 11,000 வடகொரிய வீரர்களை ரஷ்யா போர்க்களத்தில் களமிறக்கியுள்ளது.
கூடுதலாக 3,000 பேர்கள் ரஷ்யாவிற்கு புறப்பட்டுள்ளனர்.
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுக்காகப் போராட வட கொரியா படைகளை அனுப்பியதை கிம் மற்றும் புடின் கடந்த மாதம் முதல் முறையாக உறுதிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.