Phytoki - 2025 : “காடுகளை மீட்டெடுப்போம் - காடுகளை பாதுகாத்து, உயிர்களை காப்போம்!"

30 வைகாசி 2025 வெள்ளி 15:02 | பார்வைகள் : 477
மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை Rotaract சங்கத்தின் Phytoki திட்டமானது 2021ஆம் ஆண்டு முதல், இயற்கையை அதன் அழிவுக்கு முன்னரே பாதுகாக்கும் இளைஞர் இயக்கமாக வளர்ந்திருக்கிறது.
இவ்வாண்டு Phytoki திட்டத்தில் வலியுறுத்தப்படுவது என்னவென்றால், மரங்கள் நடுவது முக்கியம்தான். ஆனால், அதை விட முக்கியமானது வன அழிவுகளைத் தடுக்க, தற்போது இருக்கின்ற காடுகளை பாதுகாப்பதே என்பதாகும்.
கடந்த மே 17ஆம் திகதி நகல்ஸ் பாதுகாக்கப்பட்ட காடுகளில் இந்த ஆண்டு இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. இத்திட்டம், ரிவர்ஸ்டனின் உயிரியல் தன்மையை பாதுகாப்பதையும், மிக அபாய நிலைக்கு தள்ளப்பட்ட, மார்பிள் கல் வடிவமைப்புத் தோற்றம் கொண்ட பாறைத் தவளை இனத்தின் (Marbled Rock Frog - Nannophrys marmorata) வாழ்விடங்களை மீட்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தை செயற்படுத்தும் பணிகளில் இலங்கை வனத்துறையுடன் இணைந்து சங்கத்தின் 20க்கு மேற்பட்ட அங்கத்தவர்கள், Esoft மாத்தளை I.T மாணவர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
வனத்துறை அதிகாரிகள் ரிவர்ஸ்டன் டவரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நகல்ஸ் மலைத்தொடரின் முக்கியத்துவம், அதன் நிலவியல், நீர் வளங்கள் மற்றும் உள்ளூர் உயிரினங்கள் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டனர்.
அதனையடுத்து, இருவாழ்வியியலான ஊர்வன மற்றும் நீர்நிலங்களில் வாழ்வன பற்றிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற herpetologist மெண்டிஸ் விக்கிரமசிங்க, தவளைகள் பற்றிய சிறப்புரையொன்றை வழங்கினார்.
தவளைகள் அதிகமாக கவனிக்கப்படாத உயிரினங்கள் என்றாலும், அவை மிகவும் முக்கியமானவை. அவை சூழலின் நிலையைக் காட்டும் "bioindicator"ஆக செயற்படுகின்றன. அவை பூச்சிகளை கட்டுப்படுத்துகின்றன. மற்ற உயிரினங்களுக்கு உணவாக இருக்கின்றன.
மேற்படி குழுவின் அங்கத்தவர்கள், பிடவல பத்தனவில் மாமிசம் உண்ணும் தாவரங்களை அவதானித்து, மார்பிள் பாறைத் தவளையின் (Marbled Rock Frog) வாழ்விடத்தை மீட்கும் பணிகளில் பங்காற்றினர். இந்த தவளைகள் வாழும் கற்பாறைகள் மனித செயற்பாடுகளால் அழிக்கப்படுவதால், இத்தவளைகளின் வாழ்நிலை அபாயகரமாக உள்ளது.
“Revive the Wild” என்ற கருப்பொருள் கொண்ட Phytoki - 2025 திட்டமானது, ஒரு நிகழ்வாக, ஒரு செயற்பாடாக மட்டுமன்றி, “இருப்பதை இப்போதே காப்போம்” என்ற கொள்கையை உணர்த்துகிறது.
அந்த வகையில், Phytoki இளைஞர்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமாக தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
“இது, இப்போதே, செயற்படவேண்டிய நேரம்!”
நன்றி virakesari