Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது ! பிரதமர் மோடி

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது ! பிரதமர் மோடி

1 ஆனி 2025 ஞாயிறு 08:39 | பார்வைகள் : 609


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தியது' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் ரூ.1,300 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்வதும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் தான் ஆட்சி என்பதன் உண்மையான அர்த்தம் என்று புகழ்பெற்ற ராணியும், சமூக சீர்திருத்தவாதியுமான தேவி அஹில்யாபாய் கூறியுள்ளார். இன்று, நீங்கள் காசி சென்றால், அங்கு தேவி அஹில்யாபாயின் சிலையையும் காண்பீர்கள்.

வளர்ச்சித் திட்டங்கள்

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை அனைத்து வளர்ச்சி திட்டங்களில் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு உள்ளோம். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் அரசாங்கத்தின் அனைத்து பெரிய வளர்ச்சித் திட்டங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நான்கு கோடி வீடுகள்

ஏழை மக்களுக்காக நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் இந்த வீடுகளில் பெரும்பாலானவை பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

ரூ.5 லட்சம் சலுகை

முன்பு பெண்கள் தங்கள் நோய்களை ஒரு சுமையாக இருக்க விரும்பாமல் மறைத்தனர், ஆனால் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனா மூலம் அவர்கள் மருத்துவ வசதிகளை அணுகவும், ரூ. 5 லட்சம் வரை சலுகைகளைப் பெறவும் முடிகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் மற்றும் மின்சார வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரம்

மருத்துவ நலத்திட்டங்கள் மூலம் சமூகத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்காக பா.ஜ., அரசு பாடுபட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதிலும் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

சிந்தூர் நடவடிக்கை

பாரம்பரியமாக திருமண உறுதிப்பாட்டின் அடையாளமாக இருந்த சிந்தூர், இன்று பெண்கள் சக்தி மற்றும் தேசிய வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய எல்லை தாண்டிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி 'ரோடு ஷோ'

பிரதமர் நரேந்திர மோடி போபாலில் ஒரு பிரமாண்டமான ரோடு ஷோ நடத்தினார். வழியில் கூடியிருந்த பெண்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களைப் பார்த்து பிரதமர் மோடி கை அசைத்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்