Paristamil Navigation Paristamil advert login

முதலீடுகளை குவிக்கும் ஆந்திரா; வாய்ப்பை தவறவிடும் தமிழகம்

முதலீடுகளை குவிக்கும் ஆந்திரா; வாய்ப்பை தவறவிடும் தமிழகம்

2 ஆனி 2025 திங்கள் 05:38 | பார்வைகள் : 767


அண்டை மாநிலமான ஆந்திரா, சமீப காலத்தில் மட்டும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் வாயிலாக, 10,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. அந்நிறுவனங்கள் முதலில் தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டிய நிலையில், ஆந்திராவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில், 'ஏசி' சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, 'கேரியர் குளோபல்' நிறுவனம், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. மேலும் அம்மாநிலத்தில், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இதுதவிர, அந்நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை வழங்கும் ஆறு நிறுவனங்கள், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன.

மேலும், 'ஜூபிடர் ரினியூவபல்' நிறுவனம், 2,700 கோடி ரூபாய் முதலீட்டில், சூரியசக்தி மின் தகடுகளை உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உள்ளது. 'ஸ்ரீஜா மகிளா மில்க் புரொட்யூசர்' மற்றும், 'மதர் டெய்ரி' நிறுவனங்களும் ஆலைகளை அமைக்க உள்ளன.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆந்திரா, 10,000 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ், கேரியர் உள்ளிட்டவை, தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டின.


திடீரென அந்நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகம் இழந்துள்ளது. இதற்கு, முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில், தமிழகம் சரியான முறையை கையாளவில்லை என்ற காரணம் கூறப்படுகிறது.

தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். தொழில் துறை அதிகாரிகள் முதல் உயர் மட்டத்தினர் வரை, கூட்டங்களில் பங்கேற்காமல் அறையில் தான் இருக்கின்றனர்.

ஆனால், அவர்களை சந்திக்க வருவோரிடம், 'முன்அனுமதி வாங்கி விட்டு வர வேண்டும்' என, அவர்களின் உதவியாளர்கள் கூறுகின்றனர். இது, துவக்கமே சரியில்லை என்ற மனநிலைக்கு முதலீட்டாளர்களை தள்ளுகிறது.

சிறு நிறுவனமாக இருந்தாலும், தங்களை சந்திக்க வந்தவர்களை, தொழில் துறை அதிகாரிகளும், உயர்மட்டத்தினரும் சந்திக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் தொழில் துவங்க விரைவாக அனுமதி அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள், வேறு மாநிலங்களுக்கு செல்லவில்லை.

'மத்திய அரசின் சலுகைகள் கிடைப்பதற்காக, சில நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றிருக்கலாம்' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்