Paristamil Navigation Paristamil advert login

கர்நாடகா கூடுதலாக வழங்கிய காவிரி நீர் வீணடிப்பு

கர்நாடகா கூடுதலாக வழங்கிய காவிரி நீர் வீணடிப்பு

3 ஆனி 2025 செவ்வாய் 10:02 | பார்வைகள் : 1313


கர்நாடகா கூடுதலாக வழங்கிய 63 டி.எம்.சி., காவிரி நீரை, தமிழகம் வீணடித்துள்ளது. கதவணைகள் கட்டி முடிக்காததாலும், ஆறுகள் இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டதாலும், இந்த அவலம் தொடருவதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை உள்ளது. இதன் முழு கொள்ளளவு, 93.4 டி.எம்.சி.,யாகும். இந்த அணை வாயிலாக பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

கூடுதல் நீர்


மேட்டூர் அணையின் நீராதாரமாக, கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீர் உள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் மேட்டூர் அணையில் சேமிக்கப்பட்டு, தேவைக்கேற்ப திறக்கப்படும்.

தமிழகத்திற்கு மாதந்தோறும் திறக்க வேண்டிய காவிரி நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. முறைப்படி, கர்நாடகா நீர் வழங்குவதை கண்காணிக்க, பிலிகுண்டுலு என்ற இடத்தில் நீரளவை தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்க்கும் காலங்களில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்படும்.

அங்குள்ள அணைகளில் நீர் இருப்பு குறைந்தால், தமிழகத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்படும். இதனால், தமிழகத்தில் பாயும் காவிரியை வெள்ள வடிகாலாகவே கர்நாடகா பயன்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீர் வழங்கும் தவணைக்காலம், ஜூன் 1ல் துவங்கி அடுத்தாண்டு மே 31 வரை நீடிக்கும்.

அதன்படி, 2024 - 25ம் ஆண்டுக்கான நீர் வழங்கும் தவணைக்காலம், கடந்தாண்டு ஜூன் 1ல் துவங்கி கடந்த மே மாதம் 31ல் முடிவடைந்தது. இந்த கால கட்டத்தில், 177.2 டி.எம்.சி.,க்கு பதிலாக, 306 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கிஉள்ளது.

இழுபறி


அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 129 டி.எம்.சி., நீர் கூடுதலாக தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்த நீரில் பாசனம், குடிநீர், மேட்டூர் அணை சேமிப்பு போக, 63 டி.எம்.சி., நீர், கொள்ளிடம் கீழணை வழியாக கடலுக்கு அனுப்பி வீணடிக்கப்பட்டு உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் கடலுார் மாவட்டம் ஆதனுார், மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் இடையே, 516 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி, 2020ல் துவங்கியது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பணி இழுபறியாக உள்ளது.

கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே, 406 கோடி ரூபாயில் கதவணை கட்டும் திட்டமும் இழுபறியாக உள்ளது. மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை, சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 79 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம், 673 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது.

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, 6,941 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டப்பணிகளும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதுபோன்ற நீர் சேமிப்பு பணிகள் முடியாததால், காவிரியில் அரிதாக கிடைக்கும் நீரின் பெரும் பகுதியை, ஆண்டுதோறும் கடலுக்கு அனுப்பி வீணடிக்கும் அவலம் நீடிக்கிறது.

நீர் வழங்கும் காலம் / பாசன பயன்பாடு / வீணடிக்கப்பட்ட நீர்

2020 - 21 / 192 டி.எம்.சி., / 16.3 டி.எம்.சி.,2021 - 22/ 189 டி.எம்.சி., / 90.4 டி.எம்.சி.,2022 - 23/ 278 டி.எம்.சி., / 489 டி.எம்.சி.,2023 - 24/ 89 டி.எம்.சி., / இல்லை2024 - 25/ 188 டி.எம்.சி., / 63 டி.எம்.சி.,***

வர்த்தக‌ விளம்பரங்கள்