Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானின் முரித்கேவில் மீண்டும் தலைதுாக்கும் லஷ்கர்

பாகிஸ்தானின் முரித்கேவில் மீண்டும் தலைதுாக்கும் லஷ்கர்

3 ஆனி 2025 செவ்வாய் 12:02 | பார்வைகள் : 788


ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்ட பாகிஸ்தானின் முரித்கேவில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பா மீண்டும் தலைதுாக்கியுள்ளதாக உளவுத் துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது நம் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

தரைமட்டம்


இந்த வான்வழித் தாக்குதலில் லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முஹமது, ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புகளின் ஒன்பது முகாம்கள் தரைமட்டமாகின.

இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளின் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முரித்கே பகுதியில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பு மீண்டும் தலைதுாக்கியுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்து உள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், முரித்கேவில், லஷ்கர் அமைப்பு செயல்பட்டு வந்த கட்டடம் முழுதும் பலத்த சேதம் அடைந்த காட்சியும், கடந்த மாதம் 30ல் இங்கு ஒரு குழு தொழுகை நடத்தியதும் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ராணுவம் தாக்கிய பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் தலைதுாக்க துவங்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் எஞ்சியுள்ள தளவாடங்களை பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

திட்டம்


'இந்த தாக்குதலை அனுதாப அலையாக மாற்றி சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிடம் பெரும் தொகையை வசூலிக்கவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.

முரித்கே பகுதியில் சமீபத்தில் ஆய்வு செய்த பாகிஸ்தான் அமைச்சர் ராணா தன்வீர் ஹூசைன், அந்நாட்டு அரசு செலவில் அப்பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்