Paristamil Navigation Paristamil advert login

கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!

கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!

3 ஆனி 2025 செவ்வாய் 13:02 | பார்வைகள் : 845


கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப்பேசவில்லை'' என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி உள்ளார்.

கன்னட மொழி குறித்து பேசியதற்கு, கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. இது தொடர்பாக, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கமல் கூறியிருப்பதாவது:

என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதையை கொண்டுள்ளேன். நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதை தான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேன்.

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தொனியில் தான் பேசினேன். கன்னட மொழியை தாழ்த்தும் நோக்கத்தில் பேசவில்லை. சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிப்பதாக இருக்க கூடாது.இந்த தவறான புரிதல் தற்காலிகமானது தான் என நம்புகிறேன்.

அனைத்து இந்திய மொழிகளுக்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். நான் ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறேன். கன்னட மக்களுக்கு உள்ள மொழிப்பற்றை நான் மதிக்கிறேன். பொது அமைதியின்மை, விரோதத்திற்கு ஒரு போதும் இடம் கொடுக்க நான் விரும்பவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்