Paristamil Navigation Paristamil advert login

போரை நிறுத்த பாக்., ஓடோடி வந்தது ஏன்: முப்படை தலைமை தளபதி விளக்கம்

போரை நிறுத்த பாக்., ஓடோடி வந்தது ஏன்: முப்படை தலைமை தளபதி விளக்கம்

4 ஆனி 2025 புதன் 10:51 | பார்வைகள் : 1077


இந்தியாவை தோற்டிக்க வேண்டும் என 48 மணி நேரமாக பாகிஸ்தான் ராணுவம் செய்த முயற்சியை 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது. இதனால், போரை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனே பல்கலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறியதாவது:

கடந்த மாதம் 7 ம் தேதி தாக்குதல் நடத்த துவங்கிய போது, பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மோசமாக நடந்து கொண்டது. அப்போதும், நம் மீது தாக்குதல் நடத்தினால், ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால், இந்தியா பதில் தாக்குதல் நடத்தும். கடுமையாக தாக்குதல் நடத்தும் என்றோம்.

கடந்த 10ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், 48 மணி நேரத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பது பாகிஸ்தானின் லட்சியமாக இருந்தது. இதற்காக பல தாக்குதல்களை நடத்தினர். நாம் பயங்கரவாத முகாம்களை மட்டும் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த மோதலை பாகிஸ்தான் அதிகரித்தது.

பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது. இதனால், அந்நாடு போரை நிறுத்தி விட்டு பேச விரும்புவதாக தொலைபேசி மூலம் தெரிவித்தது.

நீண்ட கால மோதலில் ஈடுபட நாம் விரும்பவில்லை. ஆபரேஷன் பராக்ரம் நடவடிக்கையில் நாம் அனுபவம் பெற்று உள்ளோம்.( ஆபரேஷன் பராக்ரம் என்பது கடந்த 2001 ம் ஆண்டு அக்., ஜம்மு காஷ்மீர் சட்டசபை மற்றும் டிச.,13ல் பார்லிமென்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கட்டுப்பாட்டில் கோட்டு பகுதியில் ராணுவத்தை ஒன்று திரட்டவும், ராணுவ திட்டமிடலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை).

9 மாதங்கள் அங்கேயே இருந்தோம். இதில், ஏராளமான செலவுகள் உள்ளன. அனைத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. பாலகோட் தாக்குதலுக்கு பிறகு, படைகளை ஒன்று திரட்டுவதிலும் இதனை கண்டோம்.

தற்போது, படைகளை திரட்டுவதற்கு முன்னரே, நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை. அது இன்னும் தொடர்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.

பாகிஸ்தான் தரப்பை பொறுத்தவரை, நாம் இரண்டு யூகங்களை கணிக்க முடியும்.1. அவர்கள் அனைத்தையும் இழந்து கொண்டு இருந்தனர்.2. இந்திய நடவடிக்கை தொடர்ந்தால், இழப்பு இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். அதனால் தான் அவர்கள் போரை நிறுத்தும்படி தொலைபேசியை எடுத்தனர்.

போர் முறையில், ஆபரேஷன் சிந்தூர் புதிய வரலாற்றை படைத்து உள்ளது. எதிராளிக்கு எதிராக வெற்றிகரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆழமாகத் துல்லியமாகவும், தாக்குதல் நடத்த முடிந்தால் அது மிகப்பெரிய சாதனை.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னர், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், இந்தியாவிற்கும், ஹிந்துக்களுக்கும் எதிராக ஒரு விஷத்தை கக்கினார். தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய முடியாது. பயங்கரவாதத்தை போருடன் சேர்த்து புதிய தடையை ஏற்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்