வன்முறையாளர்களிற்கு சமூக நல உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் - உள்துறை அமைச்சர்!

3 ஆனி 2025 செவ்வாய் 23:08 | பார்வைகள் : 2383
PSG வெற்றியை ஒட்டி ஏற்பட்ட வன்முறைகளில் ஈடுபட்டோரிற்கான 'சிதைப்போரே செலவுகளைச் செலுத்தட்டும்' எனும் «CASSEUR-PAYEUR» சட்டம் – RSA, வீட்டு வசதி உதவிகள், மற்றும் பிற நிவாரணங்களை நீக்கும் திட்டமாக அமைய உள்ளது. இது இனிவரும் எந்த வன்முறைகளில் ஈடுபடுபவர்களிற்கும் உரியது.
லே ரெப்புப்ளிகன் (LR) கட்சியின் தலைவரும், உள்துறை அமைச்சருமான புரூனோ ரத்தைய்யோ ஆதரிக்கும் இந்த சட்ட முன்மொழிவு, குழுக்களிலும், எதிர்ப்புமிக்க ஆர்ப்பாட்டங்களிலும் வன்முறைகளில் ஈடுபட்டுக் குற்றவாளியாக உறுதி செய்யப்படும் நபர்களின் நலன்களையும் பொதுத்தொகையும் தற்காலிகமாக நிறுத்தும் திட்டமாகும்.
இந்த செவ்வாய்க்கிழமை, PSG இன் சாம்பியன்ஸ் லீக் வெற்றிக்கு அடுத்ததாக பரிஸ் மற்றும் பிரான்ஸின் பல நகரங்களில் ஏற்பட்ட வன்முறைகளை ஒட்டி, அரசு கேள்வி நேரத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைச் சுட்டிக்காட்டினர்.
இந்த நேரத்தில், லெ ரெப்பப்ளிகேன் கட்சியின் உறுப்பினர் கோரன்டின் லு ஃபூர் (Corentin Le Fur) தனது கட்சித் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சராக உள்ள புரூனோ ரத்தைய்யோவிடம், «CASSEUR-PAYEUR» (சிதைப்போர் செலுத்தட்டும்) எனப்படும் சட்ட முன்மொழிவுக்கு ஆதரவு கோரினார்.
இந்த சட்டத்தின் உள்ளடக்கம் என்ன?
Côtes-d’Armor குதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் உருவாக்கிய உரையில் கூறப்பட்டிருப்பதாவது:
'ஆர்ப்பாட்டங்கள் அல்லது மக்கள் கூட்டமாகச் சேரும் போதான வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளிற்கு தற்காலிகமாக பொதுதொகைகளும் நல உதவிகளும் நிறுத்தப்படும்'
எந்தெந்த நல உதவிகள் பாதிக்கப்படலாம்?
இந்த சட்டம் கீழ்க்கண்ட உதவிகளை ஒரு ஆண்டு காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்த முனைகிறது:
RSA (Revenu de Solidarité Active) – குறைந்த வருமானத்தினருக்கான அடிப்படை ஆதாயத் தொகை
APL (Aides Personnalisées au Logement) – வீட்டு வாடகை உதவி
குடும்ப உதவி தொகைகள் (Allocations familiales)
மேலும், வருமான வரி அடிப்படையில் வழங்கப்படும் அனைத்து நல உதவிகள்
MaPrimeRénov (வீட்டு புதுப்பிப்பு நிதி)
கல்வி உதவித்தொகைகள்
சட்ட உதவித் திட்டம் (Aide juridictionnelle)
உள்ளூர் வரி விலக்கு உதவிகள்
பயணச் செலவுத் திட்டங்கள் (aides à la mobilité)
சமூக வீட்டு வசதிக்கு (HLM) அணுகல்
போன்றவை இந்த வன்முறைக் குற்றவாளிகளிற்கு நிறுத்தப்படும். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து இவை ஓராண்டு காலத்திற்கும் அதிகமாக நிறுத்தப்படும் எனவும் உள்துறை அமைச்சர் ஆதரவு தரும் இந்தச் சட்டப் பிரேரணை தெரிவிக்கின்றது.