அமைச்சர் சுப்பிரமணியம் விசாரிக்கப்பட வேண்டிய நபர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் அண்ணாமலை

4 ஆனி 2025 புதன் 10:02 | பார்வைகள் : 1083
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தி.மு.க., வட்டச்செயலர் கோட்டூர் சண்முகம் மற்றும் அமைச்சர் சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
கடந்த ஆண்டு டிச., 23ம் தேதி, அண்ணா பல்கலை மாணவிக்கு, மோசமான பாலியல் வன்கொடுமை நடந்தது. போலீசார், 25ம் தேதி ஞானசேகரன் என்ற ஒரு குற்றவாளியை கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட உடன், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை கசிய விடப்பட்டது. அதை எதிர்த்து, அறப்போராட்டத்தை முன்னெடுத்தேன்.
பின், அண்ணா பல்கலை சில பாதுகாப்பு விஷயங்களை செய்தது. இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கண்காணிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, ஐந்து மாதங்களுக்கு பின் தீர்ப்பு வந்துள்ளது. முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய, ஒரே குற்றவாளி ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அன்று கேட்ட அதே கேள்வியையே இன்றும் கேட்கிறேன். டிச., 23ம் தேதி பாலியல் வன்கொடுமை நடந்தது. 24ம் தேதி ஞானசேகரனை, கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்கின்றனர். பின், அவரை வெளியில் விடுகின்றனர். அடுத்த நாள் மாலை மீண்டும் கைது செய்கின்றனர்.
ஏன் வெளியில் விட்டனர்; இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர்; எதற்காக, சில தி.மு.க., தலைவர்களுக்கு பதற்றம்; ஆதாரங்கள் எங்கெல்லாம் அழிக்கப்பட்டுள்ளன?
ஞானசேகரன், பிரியாணி கடை நடத்தி வந்தார். சம்பவம் நடந்த இரவு, 8:52 மணி வரை ஞானசேகரன் மொபைல்போன், 'பிளைட் மோடில்' இருந்ததாக, அரசு வழக்கறிஞர் கூறியது உண்மைதான். குற்றச்செயலில் ஈடுபட்ட பின், வெளியே வந்த ஞானசேகரன், தன் மொபைல் போனில் இருந்து, இரவு, 8:55 மணிக்கு, காவல் நிலையத்தை நிர்வகிக்கக்கூடிய ஒரு காவல் துறை அதிகாரிக்கு தான் போன் செய்துள்ளார். இன்று, அந்த அதிகாரி பதவி, பெயரை வெளியிடவில்லை. அரசின் பதிலுக்காக காத்திருக்கிறேன். அடுத்த, 48 மணி நேரத்திற்குள், அரசு தரப்பில் முதல்வர், என் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், ரகசியமாக உள்ள அனைத்து விபரங்களையும் வெளியிடுவேன்.
குறிப்பிட்ட அந்த அதிகாரி ஆறு நிமிடங்கள் கழித்து, 9:01 மணிக்கு திரும்ப ஞானசேகரனை அழைக்கிறார்; எதற்காக அழைத்தார்; இதை விசாரித்திருக்க வேண்டாமா? குற்றச்சாட்டில் கொண்டு வந்தீர்களா; அதிகாரிக்கும், ஞானசேகரனுக்கு என்ன தொடர்பு? காவல் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு, ஞானசேகரன் சொன்னது என்ன?
கடந்த ஆண்டு டிசம்பரில், ஞானசேகரன் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்தபின், மே 14ம் தேதி இன்னொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டாவது எப்.ஐ.ஆரை, சி.பி.சி.ஐ.டி., பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனரா, அண்ணா பல்கலையில் இது ஒரு வழக்கு மட்டும்தான் உள்ளதா? மேலும் பல வழக்குகள் உள்ளனவா?
மே 14ம் தேதி பதிவு செய்த வழக்கு குறித்து எந்த தகவலும் இல்லை. அது தற்போது எந்த நிலையில் உள்ளது?
170வது வட்ட தி.மு.க., செயலர் கோட்டூர் சண்முகம் என்பவருடன் ஞானசேகரன், கடந்தாண்டு டிச., 24ம் தேதி காலை, 7:27 மணிக்கு துவங்கி மாலை, 4:01 வரை ஐந்து முறை பேசியுள்ளார். அதற்கு பின் ஞானசேகரனை, காவல் நிலையம் அழைத்துச் சென்றதால் பேசவில்லை.
வெளியில் வந்ததும் ஞானசேகரனும், கோட்டூர் சண்முகமும் பேசியுள்ளனர். எதற்கு கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்; பின் எதற்கு வெளியில் விட்டனர்? ஆதாரங்களை அழிக்கவா; மொபைல்போன் பதிவுகளை அழிக்கவா; அதில் உள்ள வீடியோக்களை அழிக்கவா; அண்ணா பல்கலை கேமராக்களை துாக்கி வீசவா; எதற்கு ஞானசேகரன் வெளியில் விடப்பட்டார்?
கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து ஞானசேகரன் வெளியில் வந்தபின், டிச., 24ம் தேதி இரவு, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகின்றனர். இரவு, 8:32 மணிக்கு சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் மீண்டும் பேசுகின்றனர். எதற்காக யாரை காப்பாற்றுவதற்காக இவ்வளவு பதற்றம்?
அண்ணா பல்கலையில் பணிபுரியும் முக்கியமான அதிகாரி நடராஜன். அவரிடம்தான், நுழைவாயில்களை நிர்வகிக்கும் 'கேட் கண்ட்ரோல்' இருக்கிறது. அவரை பற்றி, 48 மணி நேரம் கழித்து பேசுவோம்.
கோட்டூர் சண்முகமும் நடராஜனும், டிச., 23ம் தேதி பேசியுள்ளனர். அடுத்து, 25, 26ம் தேதியும் பேசியுள்ளனர். இந்த நான்கு நாட்களில், 13 முறை பேசியுள்ளனர். ஞானசேகரனிடம் பேசியபின், கோட்டூர் சண்முகம், சம்பவத்தன்று இரவு 9:07 மணிக்கு காவல் துறை உயரதிகாரியிடம் பேசுகிறார். 24ம் தேதி இரவு ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன.
ஞானசேகரன் மீதான வழக்கில், 11 பிரிவுகளில், ஒரு பிரிவில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. என்ன ஆதாரங்கள் அழிக்கப்பட்டன? பின், 25ம் தேதி, அண்ணா பல்கலை கேமரா வேலை செய்யவில்லை என, போலீஸ் சொல்கிறது.
கோட்டூர் சண்முகத்திற்காக எதற்கு இவ்வளவு பதற்றம்? சிறப்பு புலனாய்வு அதிகாரிகள், அவரை விசாரித்தனரா; அவர் தொடர்புகொண்டு பேசிய காவல் துறை அதிகாரியை அழைத்து விசாரித்தனரா; அமைச்சர் சுப்பிரமணியனை காவல் நிலையம் அழைத்து, எதற்காக போன் வந்தது, அப்போது என்ன பேசப்பட்டது என்று விசாரித்தனரா?
பாதிக்கப்பட்ட மாணவியிடம், இரு காவல் துறை அதிகாரிகள், 'எப்.ஐ.ஆர்., வேண்டாம்' என்று வலியுறுத்தியதாக, அவரின் வழக்கறிஞர் கூறுகிறார்.
'யார் அந்த சார்' என்ற கேள்வியை கேட்டு வருகிறோம். கோட்டூர் சண்முகம் விசாரிக்கப்பட வேண்டிய நபர். அமைச்சர் சுப்பிரமணியம் விசாரிக்கப்பட வேண்டிய நபர். முதல்வருக்கு கட்சி பதவி, அரசு பதவி என, இரு பதவிகள் உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க., மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர்.
கோட்டூர் சண்முகமும், சுப்பிரமணியமும், 24ம் தேதி இருமுறை பேசியுள்ளனர். அதன்பின், ஆறு நாட்கள் பேசவில்லை. டிச., 24ம் தேதி பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. அங்குதான், 'யார் அந்த சார்' ஒளிந்திருக்கிறார். இந்த விஷயத்தில், உடும்புப் பிடியாக பிடித்து, கடைசி வரை செல்வேன். தொடர்ந்து கேள்விகள் கேட்போம். முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
ஆளுங்கட்சியை சேர்ந்த யாரெல்லாம் சம்பந்தப்பட்டு உள்ளனர்; பதவிகளை யார் தவறாக பயன்படுத்தினர்; காவல் துறை கையை யார் கட்டிப் போட்டனர்; ஞானசேகரனை அழைத்து வந்து, ஆதாரங்களை அழித்தது யார்?
யாரெல்லாம் உடந்தையாக இருந்தனரோ, அவர்கள் அனைவரும் குற்றவாளிகள். அனைவரையும் கூண்டில் ஏற்றும்வரை விடமாட்டேன். இவ்வாறு வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
காவல் துறையினரே தடுத்தது ஏன்?
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன. 'சார் பற்றியெல்லாம் பேசினால், நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும்' என்று மிரட்டினால், விசாரணையில் உள்ள குளறுபடிகளை மூடி மறைத்து விடலாம் என்று, அரசு நினைக்கிறது. எங்களின் சந்தேகம், நீதிபதி அளித்த தீர்ப்பின் மீதல்ல. காவல் துறையாலும், அரசு வழக்கறிஞர்களாலும் நீதிபதியின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் ஆவணங்களை பற்றியும், விசாரணையின் முழுமைத்தன்மையை பற்றியும்தான். பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மிக முக்கியமான பல கேள்விகளை ஆதாரத்தோடு கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினை கேட்கிறேன், 'யார் அந்த சார்?' கடந்த ஆண்டு டிச., 24ல் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஞானசேகரன், ஏன் உடனே விடுவிக்கப்பட்டார்; அமைச்சர் சுப்ரமணியன், தி.மு.க., வட்டச்செயலர் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலை ஊழியர் நடராஜன் ஆகியோரிடம், ஏன் விசராணை நடத்தப்படவில்லை? பாதிக்கப்பட்ட பெண்ணை, புகார் கொடுக்க வேண்டாம் என, காவல் துறையினரே தடுத்தது ஏன்; அதையும் மீறி, துணிச்சலாக புகார் அளித்த பெண்ணின் முழு விபரங்களையும் பொதுவெளியில் விட்டது ஏன்; கடந்த மே 14ல், பதியப்பட்ட மற்றொரு வழக்கில் எப்.ஐ.ஆர்., விபரங்கள் என்ன; இன்னும் எத்தனை பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்? - நயினார் நாகேந்திரன்,தமிழக பா.ஜ., தலைவர்.