Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் கிறிஸ்தவ மத தலங்களில் சட்டவிரோத குடியேறிகள் - சோதனையிட நீதிமன்றம் அனுமதி

அமெரிக்காவில் கிறிஸ்தவ மத தலங்களில் சட்டவிரோத குடியேறிகள் - சோதனையிட நீதிமன்றம் அனுமதி

4 ஆனி 2025 புதன் 19:46 | பார்வைகள் : 388


அமெரிக்காவில் சில கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களில், ஆராதனைகளில் கலந்துகொள்வோரில் சட்டவிரோத குடியேறிகளும் இருப்பதாக சந்தேகித்து, குடிவரவு அதிகாரிகளின் திடீர் சோதனை நடவடிக்கைக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இச்சோதனைகளுக்கு தடை விதிக்குமாறு கோரி கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சார்ந்த 24 அமைப்புக்கள் வொஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் 11 மனுக்களை கடந்த ஜனவரி பெப்ரவரியில் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் பின்னர்  வொஷிங்டன் மாவட்ட நீதிபதி டாப்னி பிரீட்ரிச் வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வழிபடுவோருடன் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனையிடுவதற்கு தடை இல்லை என 11 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை அளித்துள்ளார். அங்குள்ள சில சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்றவுடன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, சட்டவிரோத குடியேற்றவாசிகளை தேடி, கைது செய்து, நாடு கடத்தும் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் சில மாநிலங்களில் வீதிகளில் பயணித்த வாகனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் பாடசாலைகளிலும் மக்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளிலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தேடும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதானவர்கள் தமது அமெரிக்க வதிவிட அடையாள அட்டைகள், சமூக காப்புறுதி மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை தம்வசம் வைத்திருக்கவில்லை எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்பதற்குரிய F-1  Visaவை பெற்றுச் சென்றள்ள 104 இந்திய மாணவர்களும் சட்ட அனுமதியின்றி தொழில் செய்து வந்தமை தெரியவர, சில தினங்களுக்கு முன், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்பதற்காக வெளிநாட்டு மாணவர்கள் F-1 விசாவில் செல்கின்றனர். ஆனால், இவர்கள் பல்கலைக்கழகங்களில் ஒரு வாரத்தில் 20 மணிநேரம் மட்டும் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்யும் இந்திய மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் மணித்தியாலத்துக்கு  5 டொலர் முதல் 10 டொலர் வரை  குறைந்த சம்பளம் பெற்றுவந்துள்ளனர்.

அந்நாட்டில் உள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களிலும் இந்திய உணவகங்களிலும் குறைந்த சம்பளத்தில் இவர்கள் வேலை செய்தமை  தெரியவந்துள்ளது.

இந்த மாணவர்களைத் தேடும்  நடவடிக்கைகளின்போது இந்நிறுவனங்களின் நிர்வாகிகளும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர், ஒரு வழி பயணச்சீட்டை (One way Ticket) பயன்படுத்தி விமானமொன்றில் பயணித்து, தமது பிள்ளைகளை சந்திக்கச் சென்ற இந்திய பெற்றோர், நியுவாக்  (Newark) விமான நிலையத்தில் இறங்கியபோது, பிடிக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் ஐந்து மாதங்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு B-1,B-2  விசாவில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு செல்வோர் தமது விசா காலம் முடிந்த பின்னரும் அந்த நாட்டிலேயே தங்கிவிடுகின்றனர்.

கடந்த ஆண்டு காசாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசாவை இரத்து செய்து, நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக அங்குள்ள வெளிநாட்டு மாணவர்களின் அன்றாட  நடவடிக்கைகள், அவர்களது முகநூல்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளமை கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகிறது.

நன்றி virakesari

 

வர்த்தக‌ விளம்பரங்கள்