மார்ச் 1, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு

5 ஆனி 2025 வியாழன் 07:39 | பார்வைகள் : 374
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ல் துவங்கும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.'நேஷனல் சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான், அரசுகளின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதால், தாமதமின்றி அதை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
அதோடு, ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வளர்ச்சிக்கு அது அவசியம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.
மத்திய அரசு பதிலே சொல்லாமல் தவிர்த்ததால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சில ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின.
இந்த சூழ்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. கடந்த 2011 கணக்கெடுப்பில் ஜாதி குறித்த தகவல் சேகரிக்கப்பட்டாலும், இதுவரை அந்த விபரம் வெளியிடப்படவில்லை. இம்முறை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் 1ல் துவங்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, வரும் 16ம் தேதி வெளியிடப்படும்.
எனினும், பனிப்பொழிவுக்கு இலக்காகும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026, அக்டோபர் 1ம் தேதியே கணக்கெடுப்பு பணி துவங்கும். நாட்டின் மற்ற மாநிலங்களில் இந்த வேலைகள் 2027, மார்ச்
1ல் துவங்கும்.
தொகுதி வரையறை: முதல்வர் கேள்வி
'தொகுதி மறுவரையறை குறித்து, மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வரும் 2026ம் ஆண்டுக்கு பின் நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பை, 2027ம் ஆண்டுக்கு தள்ளி போட்டு, பார்லிமென்டில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சதி திட்டத்தை பா.ஜ., வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்னரே நான் எச்சரித்து இருந்தேன். அது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது. பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் வாயிலாக, பழனிசாமி இந்த சதி திட்டம் குறித்து பேசாமல் அமைதி காப்பதோடு, இந்த துரோகத்திற்கு துணை போகிறார்.
நியாயமான தொகுதி மறுவரையறை என்ற கோரிக்கையில் தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.