Paristamil Navigation Paristamil advert login

கொரோனாவை சமாளிக்க தயாரா இருங்க: மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனாவை சமாளிக்க தயாரா இருங்க: மத்திய அரசு எச்சரிக்கை

5 ஆனி 2025 வியாழன் 11:39 | பார்வைகள் : 480


நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன், தனி வார் டுகள், வென்டிலேட்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த, 2019ம் ஆண்டு சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா பெருந்தொற்று உலகையே நிலைகுலைய செய்தது. நம் நாட்டில், தற்போது மீண்டும் தொற்று பரவத்துவங்கியுள்ளது.

குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஜூன் 4 நிலவரப்படி, நம் நாட்டில், 4,302 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும் 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் தற்போது வரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இணை நோய் உள்ளவர்கள் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொற்று அதிகரித்து வருவதால், சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன், காய்ச்சல் வார்டுகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யவும், மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு சில வழிகாட்டுதல்களையும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், சுயமாக கண்காணித்து, மருத்துவ உதவியை நாடவேண்டும்.

முதியவர்கள், கர்ப்பிணியர், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போதும் பயணங்களின் போதும் முகக்கவசம் அணிய வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்பவேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்