புலம்பெயர்ந்தோர் படகு கிழிப்பு: மனிதாபிமானமற்ற செயல்!

5 ஆடி 2025 சனி 15:28 | பார்வைகள் : 559
பா-து-கலை (Pas-de-Calais) பகுதியில் குடியேற்றவாசிகள் சென்ற றப்பர் படகை, பிரெஞ்சு ஜந்தார்ம்கள் (Des gendarmes) கத்தி கொண்டு கிழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Osmose 62 அமைப்பின் தலைவர் டேனி பாதூ Dany Patoux இதை "மனிதாபிமானமற்ற செயல்" என கண்டித்து, இது புலம்பெயர்பவர்களுக்கு உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள், கடல்சார் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், புலம்பெயர்பவர்களை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசு இந்த புதிய "கடுமையான" நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. ஆனால் Osmose 62 அமைப்பு, இது போன்ற நடவடிக்கைகளால் மனித கடத்தல்காரர்கள் தடுக்கப்பட மாட்டார்கள் என வலியுறுத்துகிறது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் 89 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். இது போர்க் காட்சியைப் போல உள்ளது என்றும், பிரெஞ்சு மற்றும் பிரிட்டன் அரசுகள் புதிய கொள்கை மாற்றங்களை அமுலாக்கி வருவதால் நிலைமை மோசமடைவதாகவும் அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், செவ்வாயன்று பிரிட்டனுக்கு வருகை தரவுள்ளார். அவர் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.