Paristamil Navigation Paristamil advert login

அறநிலையத்துறை நிதியில் கல்லூரி: இ.பி.எஸ்., சொன்னது இதுதான்!

அறநிலையத்துறை நிதியில் கல்லூரி: இ.பி.எஸ்., சொன்னது இதுதான்!

11 ஆடி 2025 வெள்ளி 08:35 | பார்வைகள் : 143


அறநிலையத்துறை நிதி மூலம் கல்லூரி அமைக்கும் போது, அதனை விரிவாக்க போதிய நிதி கிடைக்காது; இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நான் பேசியதை மாற்றி பொய் பிரசாரம் செய்யப்படுகிறது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 2026 சட்டசபை தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி , திண்டிவனம் பகுதிகளில் அவர் பேசியதாவது: கல்லூரிகள் அமைக்க அறநிலையத்துறை நிதியை கொடுக்க வேண்டாம் என சொல்லவில்லை. மாணவர்களுக்கு தேவையான நிதி அறநிலையத்துறையிடம் இருந்து கிடைக்காது. கல்லூரி வளரும் போது, கட்டடங்கள் கட்ட வேண்டிய நிலையும், பல பிரிவுகள் உருவாக்க வேண்டிய நிலையும் ஏற்படும். அரசு கல்லூரியாக இருந்தால், அனைத்தும் கிடைக்கும். அறநிலையத்துறையாக இருந்தால் நிதி கிடைக்காது. மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனை சுட்டிக்காட்டினோம். உன்னத நோக்கத்தோடு, உயர்ந்த நோக்கத்தோடு மாணவர்களின் எதிர்காலம் கருதி அரசு கல்லூரி துவங்க வேண்டும் என்று சொன்னேன். வேண்டாம் என சொல்லவில்லை. திட்டமிட்டு ஸ்டாலின் பொய் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏன் அரசிடம் பணம் இல்லையா? அரசு திவாலாகி விட்டதா?

கடலில் பேனா வைக்க ரூ. 82 கோடி உள்ளது. உதயநிதி கார் பந்தயம் நடத்த ரூ.42 கோடி பணம் உள்ளது. மாணவர்கள் கல்வி கற்க கல்லூரி கட்ட வேண்டும் என்று சொன்னால் ஏன் தவறாக நினைக்கின்றீர்கள். வேண்டும் என்றே தவறான, அவதூறான செய்தி பரப்புகின்றீர்கள். இது கண்டனத்துக்குரியது. மாணவர்கள் எதிர்காலம் கருதியும், அவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகவும் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

தமிழகத்தில் 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முதல்வர் இல்லை. பேராசிரியர்கள் இல்லை. மாணவர்களின் நிலை எப்படி இருக்கும். இந்த ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தி.மு.க., ஆட்சியில் விலை உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. கமிஷன், கலெக்சன், கரப்சன் நடக்கிறது. மதுரை மாநகராட்சியில், வரி வசூலில் ரூ.200 கோடி மோசடி நடந்துள்ளது. எட்டு அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மண்டல தலைவர்கள் சொன்னதால் தான், மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் இது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்