Paristamil Navigation Paristamil advert login

சீன அதிபருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

சீன அதிபருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

15 ஆடி 2025 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 138


எல்லை பதற்றம் தணிந்த பிறகு முதல் முறையாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இருநாட்டு தலைவர்களும் கை குலுக்கி கொண்டனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம், நம் அண்டை நாடான சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று (ஜூலை 15) நடைபெறுகிறது. இதில் உறுப்பு நாடாக உள்ள நம் நாட்டின் சார்பில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

இதற்காக, சீனா சென்றுள்ள அவர், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை நேற்று சந்தித்து பேசினார். “இந்தியா - சீனா இடையே நல்லுறவை மேம்படுத்துவதன் வாயிலாக பரஸ்பரம் நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்தும்.

உலகளவில் பதற்றமான சூழல் நிலவும் சூழலில், இரு தரப்புக்கும் இடையே கருத்து பரிமாற்றம் மிகவும் அவசியம்,” என, சீன துணை அதிபர் ஹான் ஜெங்கிடம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இருநாட்டு தலைவர்களும் கை குலுக்கி கொண்டனர். 2020ம் ஆண்டு கல்வான் மோதலுக்கு பிறகு முதல் முறையாக, சீன அதிபரை ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது குறித்து, ஜெய்சங்கர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை பீஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

நமது இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சியை சீன அதிபரிடம் விளக்கினேன். அந்த விஷயத்தில் நமது தலைவர்களின் வழிகாட்டுதலை மதிக்கிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்