மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது: என்.எஸ்.சி.என்.,

16 ஆடி 2025 புதன் 11:23 | பார்வைகள் : 242
அசாம் தனிநாடு கோரி போராடி வரும் தடைசெய்யப்பட்ட, 'உல்பா-- -- ஐ' இயக்கத்தின் முகாம் மீது, 'ட்ரோன்' தாக்குதல் நடத்தவில்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ள நிலையில், ராணுவம் தாக்குதல் நடத்தியதாக மற்றொரு அமைப்பான என்.எஸ்.சி.என்., எனப்படும் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமை பிரித்து தனி நாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உல்பா பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள், நம் அண்டை நாடான மியான்மர் எல்லை பகுதியில் பதுங்கி இருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
மியான்மர் எல்லையில் உள்ள நாகாலாந்தின் லோங்வா முதல், அருணாச்சல பிரதேசத்தின் பங்சாய் கணவாய் வரை உள்ள தங்கள் முகாம்கள் மீது, இந்திய ராணுவம் கடந்த, 13ம் தேதி ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக இந்த அமைப்பு கூறியது.
இந்த தாக்குதலில் தங்களின் முக்கிய தளபதி நயன் அசோம் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அறிக்கையில் கூறியிருந்தது.
ஆனால் அப்படியான எந்த தாக்குதலையும் ராணுவம் நடத்தவில்லை என, நம் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் மறுத்துள்ளார்.
இந்நிலையில், நாகாலாந்து, மணிப்பூர், அசாம், அருணாச்சல பிரதேசத்தை உள்ளடக்கிய நாகாலிம் என்ற தனிநாடு குறிக்கோளுடன் செயல்படும் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் என்ற அமைப்பும், இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
இந்த தாக்குதல், 13ம் தேதி அதிகாலை 2:00 மணி முதல் 4:00 மணி வரை நடந்தது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.