டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறிய சரமாரி புகார்: மயிலாடுதுறையில் டி.ஐ.ஜி., விசாரணை

19 ஆடி 2025 சனி 05:49 | பார்வைகள் : 162
மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறிய புகார்கள் தொடர்பாக, தஞ்சை மண்டல டி.ஐ.ஜி., இன்று நேரில் விசாரணை நடத்தினார்.
மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி ஆக இருந்த சுந்தரேசனுக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டதால், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், 'டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் திரும்ப பெறப்படவில்லை, அலுவல் பணி காரணமாக அவரிடம் இருந்து வாங்கிய வாகனத்தை மீண்டும் திரும்ப வழங்கி விட்டதாக தெரிவித்திருந்தார்.
அதை மறுத்த டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சென்னையில் இருந்து உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது மாவட்ட காவல்துறை அழுத்தம் தருவதாக தனது குமுறலை வெளிப்படுத்திருந்தார்.
இந்நிலையில் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று மயிலாடுதுறை எஸ்.பி., அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.