ஆப்பரேஷன் சிந்து நடவடிக்கை 1,428 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

23 ஆனி 2025 திங்கள் 06:44 | பார்வைகள் : 367
அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் மீது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல் நடத்துகிறது. அப்பகுதிகளில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இச்சூழலில், ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதற்கான பணிகளை ஈரான், அர்மேனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளில் உள்ள இந்தியத் துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன.
முதற்கட்டமாக, ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் கடந்த 19ல், டில்லி வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து, ஈரானின் டெஹ்ரானில் இருந்து மாணவர்கள் மற்றும் புனித யாத்திரை சென்றவர்கள் என மொத்தம் 600 இந்தியர்களை அழைத்து வர, மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
எனினும், போர் சூழல் காரணமாக அங்குள்ள வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்ப, தங்கள் வான் எல்லையை பயன்படுத்த ஈரான் அரசு சிறப்பு அனுமதி அளித்தது.
இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத மஷாத் நகருக்கு, அழைத்து வரப்பட்ட 600 பேரும், இரண்டு தனி விமானங்கள் வாயிலாக டில்லிக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
இதேபோல் துர்க்மெனிஸ்தானின் தலைநகர் அஸ்காபாத், ஈரானின் மஷாத் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்ட இரண்டு தனி விமானங்கள் வாயிலாக, மேலும் 601 பேர் நேற்று டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்படி, 'ஆப்பரேஷன் சிந்து' வாயிலாக இதுவரை, 1,428 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலில் சிக்கி தவித்த 160 இந்தியர்கள் அதன் அண்டை நாடான ஜோர்டான் எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தனி விமானம் வாயிலாக இன்று நாடு திரும்புவர்.