160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!

24 ஆனி 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 207
மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால் 160 இந்தியர்களுடன் ஜோர்டான் நாட்டில் இருந்து டில்லி புறப்பட்ட விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
குவைத்தில் தரையிறக்கப்பட்ட விமானம், இன்று மதியம் 2.30 மணிக்கு டில்லிக்கு புறப்படும். ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து இந்தியர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. ஆபரேஷன் சிந்து நடவடிக்கை கீழ், மொத்தம் 604 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது
அமெரிக்கா தனது அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியதற்கு பதிலடியாக ஈரானிய தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானம் குவைத்துக்குத் திருப்பி விடப்பட்டது.
போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா எடுத்த முடிவைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
இதனால் ஜோர்டானில் இருந்து டில்லி புறப்பட்ட விமானம் குவைத்துக்கு திருப்பி விடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், குவைத்தில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.