Paristamil Navigation Paristamil advert login

காரில் சிக்கி தொண்டர் பலி: ஜெகன் மீது வழக்கு

காரில் சிக்கி தொண்டர் பலி: ஜெகன் மீது வழக்கு

24 ஆனி 2025 செவ்வாய் 12:42 | பார்வைகள் : 164


ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் காரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.

பைபாஸ் சாலை


ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெட்டி ரெண்டபல்லா கிராமத்துக்கு கடந்த 18ம் தேதி சென்றார்.

ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட தன் கட்சி தொண்டர் வீட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.

எதுக்கூரு பைபாஸ் சாலை வழியாக அவரது கார் அணிவகுத்து சென்றபோது, பின்தொடர்ந்த கூட்டத்தில் இருந்த செலி சிங்கையா, 55, என்பவர் மலர்களை துாவியபடி வந்தார்.

அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது ஜெகனின் கார் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த சிங்கையா, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

முதலில், ஜெகன் கான்வாயில் சென்ற வாகனத்தில் சிங்கையா ஏறி விழுந்ததால் காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது.

இழப்பீடு


ஆனால், ஜெகன் பயணித்த வாகனத்தின் அடியில் அவர் விழுந்து நசுங்கிய 'வீடியோ' சமூக ஊடகங்களில் பரவின. கட்சி சார்பில் சிங்கையாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சிங்கையா உயிரிழந்தது குறித்து அவரின் மனைவி செலி லுார்து மேரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து குண்டூர் மாவட்ட எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், “இந்த வழக்கு தொடர்பான 'சிசிடிவி' மற்றும் 'ட்ரோன்' காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த உயிரிழப்பு ஜெகனின் காரால் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி, அவர் ஓட்டுநர் ரமணா ரெட்டி உட்பட ஆறு பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை தொடரும்,” என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்