ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவில்லை - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

25 ஆனி 2025 புதன் 12:14 | பார்வைகள் : 224
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படவில்லை என அமெரிக்காவின் உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
ஈரானும் பதிலடியாக தாக்குதலை தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான போராக உருவெடுத்தது.
இதனை தொடர்ந்து, கடந்த 22 ஆம் திகதி ஈரானில் உள்ள ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீது "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியது.
பி-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தி, GBU-57A என்ற பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியது. இதன் மூலம், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் தாக்கியழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு தெரிவித்தனர்.
இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்கா ராணுவ தளத்தை ஈரான் தாக்கியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
ஆனால், அங்குள்ள யுரேனியங்களை தாக்குதலுக்கு முன்னதாகவே வேறு இடத்திற்கு மாற்றி விட்டோம் இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் குண்டு வீச்சால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதமடைந்திருந்தாலும், முற்றிலும் அழிக்கப்படவில்லை என அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்த அறிக்கை போலியான ஒன்று. ஈரானின் அணுஆயுதம் தயாரிக்கும் ஆற்றலை நாம் முற்றிலுமாக அழித்துவிட்டோம்.
அணுசக்தி நிலையங்கள் தகர்க்கப்படவில்லை என கூறுபவர்கள் ராணுவத்தின் வெற்றிகரமான தாக்குதலை கொச்சைப்படுத்துபவர்கள்" என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.