இலங்கையில் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

26 ஆனி 2025 வியாழன் 12:41 | பார்வைகள் : 176
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்கான பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை முதல் ஜூலை 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர்கள் ஊடாக விண்ணிப்பிக்க முடியும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது தேசிய அடையாள அட்டை ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றில் வழிகாட்டுதல்களை அவதானித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வேறு தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ஏற்கனவே அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் எந்த காரணத்துக்காகவும் விண்ணப்ப முடிவு காலம் நீடிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.