யாழில் இருந்து செல்லும் நீண்டதூர பேருந்துகளுக்கு அறிவுறுத்தல்

27 ஆனி 2025 வெள்ளி 14:58 | பார்வைகள் : 196
இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட மாகாண இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு வட மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஏ-9 வீதியில் கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாடசாலை மாணவர்களும் தங்களுக்கான போக்குவரத்துச் சேவை சீராகக் கிடைப்பதில்லையென கிளிநொச்சி மாவட்டச் செயலர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
குறுந்தூர பேருந்து சேவை இல்லாத காரணத்தால் இப்பகுதி பயணிகள் நீண்டதூர பேருந்துகளை நம்பியுள்ளனர். ஆனால் பல நீண்டதூர பேருந்துகள் இப்பகுதியிலுள்ள பயணிகளை ஏற்றாமல் தவிர்க்கின்றன.
எனவே ஏ-9 வீதியில் சேவையில் ஈடுபடுகின்ற யாழ் – வவுனியா, யாழ் – முல்லைத்தீவு, யாழ் -கிளிநொச்சி, யாழ் – துணுக்காய் வழித்தட பேருந்துகள் அனைத்தும் கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகளை ஏற்றிச் செல்லுதல் கட்டாயம் என கடமையில் இருக்கும் சாரதி, நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகியனவற்றைக் கோரியுள்ளதாக அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.