விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா?

27 ஆனி 2025 வெள்ளி 15:53 | பார்வைகள் : 182
இன்று வெளியான விஜய் ஆண்டனியின் 'மார்கன்' திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 'காற்றின் வழியே பயணிப்பவன்' என்ற பொருள் கொண்ட சித்தர்கள் மொழியின் 'கனன மார்கன்' என்ற தலைப்பில் உருவாகிய இந்த படத்தை, இயக்குனர் லியோ ஜான் பால் ஆன்மீகத்தையும் அறிவியலையும் கலந்து ஒரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக படைத்துள்ளார்.
சென்னையில் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். உடலில் செலுத்தப்படும் விசித்திர ஊசியால் உடல் கறுத்து மரணம் நிகழ்கிறது. இந்த கொலை வழக்கை, ஏற்கெனவே இது போன்றதொரு வழக்கை கையாண்ட காவல்துறை அதிகாரியான துருவ் (விஜய் ஆண்டனி) விசாரிக்க தொடங்குகிறார். கொலை நடந்த அன்று சிசிடிவியில் பதிவான இளைஞரை தேடும்போது, எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் கொலையாளி யார், கொலைகளின் காரணம் என்ன என்பதே 'மார்கன்' படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பமே விறுவிறுப்பாக இருப்பதால், கவனம் சிதறாமல் பார்க்கலாம். க்ரைம் த்ரில்லராக இருந்தாலும், வித்தியாசமான அணுகுமுறை பாராட்டுக்குரியது. குறிப்பாக, இடைவேளைக்கு பின் எதிர்பார்ப்பு கூடுகிறது. அஜய் திஷன் கதாபாத்திரம் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. அறிமுக படத்திலேயே சிறப்பாக நடித்துள்ள அவர், நீருக்கடியில் வரும் காட்சிகளில் வியக்க வைக்கிறார். ஷெல்டன் சௌவின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் கதைக்கு துணை நிற்கின்றன. சித்தர்கள் வழி, ரசாயன ஊசி என படம் சலிப்பின்றி நகர்கிறது.
இருப்பினும், இரண்டாம் பாதியில் வரும் சில திருப்பங்கள் உணர்வுப்பூர்வமாக இல்லை. லாஜிக் பிழைகள் காரணமாக, படம் சுமார் என்ற நிலையிலேயே நின்றுவிடுகிறது. க்ரைம் த்ரில்லர் கதாபாத்திரத்தை அவர் திறம்பட கையாண்டிருப்பதால், சில குறைகளை தாண்டி அவரின் நடிப்பு ஈர்க்கிறது. படத்தின் தலைப்பை போலவே சில குழப்பமான காட்சிகள் இருப்பது சிறிய ஏமாற்றமே. மற்றபடி, க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு 'மார்கன்' ஒரு ரசிக்கக்கூடிய படம்.