இத்தாலியில் 21 நகரங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

28 ஆனி 2025 சனி 20:14 | பார்வைகள் : 234
இத்தாலியில் வெப்பநிலை அதிகரித்து வருவதாக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அத்துடன் நாட்டின் 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மட்டுமின்றி, தலைநகர் ரோம், பொருளாதார சக்தி வாய்ந்த மிலன் மற்றும் வெனிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கும் அமைச்சகம் தனது உச்சபட்ச சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், சில இடங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (99 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் சுகாதார அமைச்சகமானது சமீப நாட்களில் இத்தாலியின் 27 பெரிய நகரங்களுக்கு தினமும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு வெப்ப அலை எச்சரிக்கைகளை வெளியிடுகிறது.
காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், குளிரூட்டப்பட்ட பொது இடங்களில் தஞ்சம் அடையுமாறும் அறிவுறுத்தி வருகிறது.
வெனிஸில், சனிக்கிழமை வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை எட்டக் கூடும் என்றும் ஆனால் ஈரப்பதம் காரணமாக சுமார் 36 செல்சியஸை போல உணரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கையில் இருந்த புளோரன்ஸில், சனிக்கிழமை வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ரோம், மிலன் மற்றும் நேபிள்ஸில் வெப்பநிலை 36C வரை உயரும்.
தலைநகர் உட்பட நாடு முழுவதும் வெப்பமான வானிலை பல நாட்களாகத் தொடர்ந்து வருவதால் தற்போது இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வெப்ப அலை இருந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரபலமான இடமான கொலோசியம் போன்ற பரபரப்பான இடங்களில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவர்களை நகர நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது.
தீவிர வெப்ப அலைகள் புவி வெப்பமடைதலின் தெளிவான அறிகுறி என்றும், அவை அடிக்கடி, நீண்ட மற்றும் தீவிரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.