வேண்டாம்... இனி தி.மு.க., வேண்டாம்: நயினார் நாகேந்திரன் புதிய கோஷம்

30 ஆனி 2025 திங்கள் 08:15 | பார்வைகள் : 138
சட்டசபை தேர்தலுக்காக, 'வேண்டாம் இனி தி.மு.க., வேண்டாம்' என்ற கோஷத்தை துவங்கி உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., கூடுதல் சுமை என கூறும் சீமான், சுமை இல்லாத கட்சி எது எனவும் விளக்கமாக கூறி இருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உட்பட அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அ.தி.மு.க., பொதுச் செயலருடன் விஜய் பேசினாரா, இல்லையா என எனக்கு தெரியவில்லை.
தற்போது, 'வேண்டாம் இனி தி.மு.க., வேண்டாம்' என்ற ஒரு கோஷத்தை துவங்கி உள்ளேன். அதன்படி, அனைவரும் சிந்திக்க வேண்டும். சென்னையில், நட்சத்திர ஹோட்டல்களில் கோகைன் போன்ற போதைப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும், முக்கிய நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் பாடகி ஒருவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதை கருத்தில் கொண்டு, இந்த கோஷத்தை தேர்தல் வரை எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸை சந்தித்தது பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. மதுரையில் முருகன் மாநாடாக விதைக்கப்பட்டது, 2026ல் ஆல மரமாக வளர்ந்து, நிழல் தரும் அரசாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.