Paristamil Navigation Paristamil advert login

காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தும் காயுது கடைமடை: ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாராததால் சிக்கல்

காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தும் காயுது கடைமடை: ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாராததால் சிக்கல்

4 ஆவணி 2025 திங்கள் 07:07 | பார்வைகள் : 155


மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டு, காவிரியில் நீர் பெருக்கெடுத்தாலும், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகள் நீரின்றி காய்வதால், குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

டெல்டாவின் கடைமடையான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது. காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயிகள் இந்த சாகுபடியில் இறங்கியுள்ளனர். கடந்த காலங்களில் காவிரி நீர் உரிய நேரத்திற்கு வராததால், முப்போக சாகுபடி இப்போது ஒருபோக சாகுபடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு நீர்நிலைகளை மேம்படுத்தாததாலும், மழைக்காலங்களில் கூடுதல் நீரை சேமிக்க முறையாக வழி வகை செய்யாததாலும், ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆறுகள், வாய்க்கால்களை துார்வார பல கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும், முறைகேடுகளாலும் அப்பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை.

இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் காவிரி நீர் உரிய காலத்தில் திறக்கப்பட்டாலும், கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக நீர் வந்து சேர்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுகிறது. இந்தாண்டு காவிரியிலிருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறந்துவிட்டதால், விவசாயிகள் நம்பிக்கையோடு 2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.

ஆனால், பல பகுதிகளில் தண்ணீரின்றி நெற்பயிர் காய்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நாகை உள்ளிட்ட கடைமடை மாவட்டங்களில் முழுமையாக காவிரி நீர் வந்து சேரவில்லை. கீழ்வேளூர் பகுதியில் ஓடம்போக்கி ஆறு, வெள்ளையாறுகளில் எதிர்பார்த்த தண்ணீர் திறக்கப்படவில்லை. இதேபோல் வேதாரண்யம் முள்ளிவாய்க்காலில் வெங்காயத்தாமரையால் தண்ணீர் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி சுற்று வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர் காய்ந்து கருகும் நிலை உள்ளது.

தேங்கும் நீர்

திருவாரூர் மாவட்டத்தில் பாசன ஆறுகளில் தண்ணீர் கூடுதலாக வந்த போதிலும், கடைமடை பாசன வாய்க்கால் வரை காவிரி நீர் சென்றடைவதில் தடை, தாமதம் தொடர்கிறது. மாவட்டத்தின் பிரதான ஆறுகளான பாமணி, கோரையாறு, வெள்ளையாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி, பாண்டவையாறு உள்ளிட்டவற்றில் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது.

ஆனாலும், வாய்க்கால்களை முறையாக துார்வாராமல் ஒப்புக்கு துடைத்தெடுத்து போனதால், தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயிர் தேவைக்கு தண்ணீர் பெறுவதில் சிரமம் தொடர்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஜூன் 22ல் காவிரி நீர் வந்து சேர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளான மஞ்சளாறு, பழவாறு, வீரசோழன் ஆறு, அய்யனாறு, கும்கி மண்ணியாறு, கருமலை ஆறு, தெற்கு ராஜன் வாய்க்கால் உட்பட அனைத்து பெரிய ஆறுகளில் தண்ணீர் செல்கிறது.

ஆனால், அதிலிருந்து பிரிந்து செல்லும் 'பி, சி, டி' பிரிவு வாய்க்கால்கள் பலவற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததால், பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை தற்போது வரை உள்ளது. இதில், விழுப்புரத்திலிருந்து நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சீர்காழி தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் பல சி, டி பிரிவு வாய்க்கால்கள் துார்க்கப்பட்டுள்ளதால், சில இடங்களில் தண்ணீர் வரவில்லை.

மேலும், மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் உள்ள வாய்க்கால்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பதால், அந்த கிராமத்திற்கு ஒன்பது ஆண்டுகளாக நீர் வரவில்லை. இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சி, டி பிரிவு வாய்க்கால்கள், பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சில வாய்க்கால்கள் முறையாக துார்வாரப்படவில்லை. 6 கி.மீ., வாய்க்கால் என்றால் 3, 4 கி.மீ., துார்வாரி விட்டு, நிதியில்லை எனக்கூறி பணிகளை நிறுத்தி விடுகின்றனர். இதனால், குறுவை சாகுபடி செய்ய, தண்ணீரை உரிய நேரத்திற்கு பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

   அதிகாரிகளை 'துாக்கி அடிங்க' கடைமடையான நாகை மாவட்டத்திற்கு முழுமையாக தண்ணீர் வராததற்கு முறையாக துார்வாரப்படாததே காரணம். கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வதில்லை. கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையாக காவிரி நீர் செல்லாததால், பல ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக நீர்வளத்துறையில் அதிகாரிகள் பணியாற்றுவது தான் காரணம். அரசு தலையிட்டு, அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, கடைமடை பகுதிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - தமிழ்ச்செல்வன், மாநில கொள்கை பரப்பு செயலர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

கிடப்பில் தடுப்பணைகள்

* நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில், 50 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதில், 100 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும்

* சின்னதம்பூர் மரவனாறு மற்றும் பாப்பாகோவில் அருகே ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* பெருங்கடம்பனுார் தேவநதி வடிகாலில் தடுப்பணை கட்ட அரசாணை வழங்கப்பட்டு, பணி துவங்கப்பட உள்ளது.

* மயிலாடுதுறை மாவட்டம், மாதிரவேளூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.

* குமாரமங்கலம் அருகே ஆதனுாரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 410 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பணையில், 1 டி.எம்.சி., தண்ணீர் தேக்கலாம். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

* திருவாரூர் மாவட்டத்தில் பாமணியாறு, கோரையாறு, வெள்ளையாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி, பாண்டவையாறு உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணை அமைத்து தண்ணீர் தேக்க வேண்டும் என, ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

* ஆனால், புதிய தடுப்பணை கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்