Paristamil Navigation Paristamil advert login

சிராஜ் வீசிய அந்த ஓவர்... இந்தியா அபார வெற்றி! இங்கிலாந்துக்கு அதிர்ச்சி!

சிராஜ் வீசிய அந்த ஓவர்... இந்தியா அபார வெற்றி! இங்கிலாந்துக்கு அதிர்ச்சி!

5 ஆவணி 2025 செவ்வாய் 15:06 | பார்வைகள் : 112


இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம், தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து, ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பையை பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகக் குறைந்த ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் திகழ்ந்தவர்.

இந்த போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

நான்காம் நாள் ஆட்டத்தில், ஒரு தவறான ஃபீல்டிங்கால் சதம் அடித்த ஹாரி புரூக்கிற்கு ஒரு வாய்ப்பை வழங்கினாலும், கடைசி நாளில் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது தவறை சரி செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

374 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, கடுமையாகப் போராடி 367 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

301 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றிக்கு கிட்டத்தட்ட 70 ஓட்டங்கள் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு தேவைப்பட்ட நிலையில், மலமலவென விக்கெட்டுகளை பறிகொடுத்து கையில் இருந்த வெற்றியை இங்கிலாந்து தவறவிட்டது.

தோள்பட்டை காயம் இருந்தும், கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்த சம்பவம் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிராஜ் வெற்றியை முடித்து வைத்தாலும், நான்காம் நாளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா இந்தியாவின் திருப்புமுனைக்கு காரணமாக இருந்தார்.

சுப்மன் கில் தலைமையில் கிடைத்த இந்த வெற்றி, இந்திய அணியின் உறுதியையும், போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தியது. இந்த வெற்றி, மிகவும் பரபரப்பான முறையில் நடந்த தொடருக்கு ஒரு சரியான முடிவாக அமைந்தது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்