அதிகரித்துச் செல்லும் தீ பரவல்… 16,000 ஹெக்டேயர் காடு நாசம்! - பிரதமர் நேரில் விஜயம்!

6 ஆவணி 2025 புதன் 16:54 | பார்வைகள் : 1001
Aude மாவட்டத்தில் காட்டுத்தீ கட்டுப்பாடில்லாமல் பரவி வருகிறது. 24 மணிநேரத்தில் 16,000 ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியுள்ளன. 16,000 ஹெக்டேயர்கள் என்பது பரிஸ் நகரத்தை விட பெரிதாகும்.
தீ தொடர்ந்து விளாசி எரிவதற்கு வெப்பமும் ஒரு காரணமாகும். தீயணைப்பு படையினர் 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 15 நகர்ப்பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, உள்துறை அமைச்சர் Bruno Retailleau ஆகியோர் நேரில் விஜயம் மேற்கொண்டுள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட Saint-Laurent-de-la-Cabrerisse நகரை அவர்கள் மாலை 4 மணி அளவில் சென்றடைந்தனர். தீயணைப்பு படையினரை சந்தித்து உரையாடி நிலவரங்களை கேட்டறிந்தனர்.
அங்கு 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அறிந்ததே. குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேற மறுத்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மின்சாரம், குடிநீர் விநியோகங்கள், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் - ஸ்பெயினை இணைக்கும் A9 நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.