ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் பேச்சு : இந்தியா வர அழைப்பு

9 ஆவணி 2025 சனி 13:23 | பார்வைகள் : 1401
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக இந்தியாவுக்கு வரியும், அபராத வரியும் விதித்துள்ளார். இந்த விவகாரம், சர்வதேச அளவில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் இன்று போனில் பேசினர். உக்ரைன் மோதல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்து மோடியிடம் புடின் விளக்கினார்.
இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்த பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துக்கூறினார்.
இரு தரப்பு உறவு குறித்து கலந்துரையாடிய இருவரும், இதனை இன்னும் வலுப்படுத்துவது என அப்போது உறுதி பூண்டனர். அப்போது இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வருமாறு புடினுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மகிழ்ச்சி
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: எனது நண்பர் புடினுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரு தரப்பு உறவுகள் குறித்து கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்தாண்டு இந்தியா வரும் அதிபர் புடினை வரவேற்பதில் ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.
சீன அதிபருடன் புடின் பேச்சு
இதனிடையே , சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் புடின் ஆலோசனை நடத்தினார். அப்போது, உக்ரைன் நிலவரம் குறித்தும், ரஷ்யா - அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் புடின் விளக்கி கூறினார்.