Paristamil Navigation Paristamil advert login

குற்றங்களில் ஈடுபடுவோரை தேடி பிடித்து பதவி கொடுக்கும் திமுக: அண்ணாமலை

குற்றங்களில் ஈடுபடுவோரை தேடி பிடித்து பதவி கொடுக்கும் திமுக: அண்ணாமலை

16 ஆவணி 2025 சனி 05:00 | பார்வைகள் : 123


சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக கட்சியின் வரலாறு,'' என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவியிடம் பட்டம் வாங்காமல், அவரை புறக்கணித்து, துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்ற ஜீன் ஜோசப் என்ற தி.மு.க., பிரமுகரின் மனைவியால் சர்ச்சை எழுந்தது. இவரது கணவர் ராஜன், நாகர்கோவில் மாநகர தி.மு.க., துணை செயலராக உள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக கட்சியின் வரலாறு. இதனால் பாதிக்கப்படுவது, சாதாரண பொதுமக்களே.

இரண்டு நாட்களுக்கு முன்பாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், கவர்னர் மீது விமர்சனம் வைப்பதாக நாடகமாடிய நாகர்கோவில் திமுக மாநகர இணைச் செயலாளரான ராஜன் என்ற நபர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவில் மக்களால், கோழி ராஜன், தடியன் ராஜன் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்ததுடன், பல குற்றச்சாட்டுகள் கொண்ட ஒரு நபர்.

நாகர்கோவிலில் உள்ள, புகழ்பெற்ற சவேரியார் கோவிலுக்கு, அரசு ஒதுக்கிய சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை, இந்த கோழி ராஜன் சுருட்டி விட்டதாகவும், அந்தப் பணத்தில், பல சொத்துக்களும், தனது மனைவி பெயரில் இன்னோவா காரும் வாங்கியிருப்பதாக, நாகர்கோவில் மக்கள் புகார் கூறியிருக்கின்றனர். இந்த நிதி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியும், அதற்குப் பதிலளிக்க மறுக்கிறார்கள். மேலும், இந்த நபர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தும், அந்தப் புகார், கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தவிர, தன்னை எதிர்ப்பவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும், பள்ளி அருகே, குடித்து விட்டு மாணவ, மாணவியருக்குத் தொந்தரவாகக் கூச்சலிடுவதும் என, இந்த கோழி ராஜன் மீது, நாகர்கோவில் கோட்டாறு பரதர் தெற்கு ஊர் மக்கள் ஏற்கனவே மாவட்ட கலெக்டர் , எஸ்பி என அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இன்று வரை, கோழி ராஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது திமுக அரசு. இதற்கு ஒரே காரணம், இந்த நபர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். பொதுமக்கள் தன் மீது அளித்த புகாரைத் திசைதிருப்ப, கவர்னர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகமாடியிருக்கிறார் கோழி ராஜன்.

கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணிக்கு, தமிழக அரசு ரூ.2.28 கோடி ஒதுக்கீடு செய்து, முதல்கட்டமாக ரூ.1.14 கோடி வழங்கியிருக்கிறது. இந்த நிதிக்கான கணக்கினை ஊர்ப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏன் மறுக்கிறார்கள்? பொதுமக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும்படி நடக்கும் கோழி ராஜன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட போலீசார் ஏன் தயங்குகிறது?

தொடர்ந்து சமூக விரோதிகளைப் பாதுகாத்து, பதவி கொடுத்து வளர்த்து விடும் திமுகவுக்கு, விரைவில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்