பா.ம.க., ராமதாஸ் வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டு கேட்பு கருவி போலீசில் ஒப்படைப்பு

24 ஆடி 2025 வியாழன் 09:43 | பார்வைகள் : 291
தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டு கேட்பு கருவி, சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிளியனுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மற்றும் கிளியனுார் போலீசார் தைலாபுரம் தோட்டத்தில் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். அப்போது, ஒட்டுக் கேட்பு கருவியை ராமதாஸ், போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை.
மேலும் தனியார் துப்புறியும் ஏஜென்சி மூலமும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுவரை துப்பறியும் நிறுவனம் வசம் இருந்த ஒட்டு கேட்பு கருவி, நேற்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமதாஸ் உத்தரவின்பேரில், நேற்று மதியம் 2:15 மணிக்கு, கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், கிளியனுார் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம், ஒட்டு கேட்கும் கருவி, அதில் இணைக்கபட்டிருந்த சிம், பேட்டரி ஆகியவற்றை ஒப்படைத்தார்.
பின்னர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
விசாரணைக்காக தற்போது போலீசாரிடம் ஒட்டு கேட்பு கருவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை யார், எதற்காக வைத்தனர் என விசாரணைக்கு பிறகு தெரியும். இந்த ஒட்டு கேட்கும் கருவி, லண்டனில் வாங்கப்பட்டுள்ளது.
இக்கருவியில் லைக்கா சிம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டு கேட்கும் கருவி, பேசும்போது மட்டும் ஆன் ஆகிவிடும். மற்ற நேரத்தில் 'ஆப்' ஆகிவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.