வடிவேலு - பகத் பாசில் கூட்டணி வெற்றி அடைந்ததா?

26 ஆடி 2025 சனி 15:36 | பார்வைகள் : 218
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலுவும், பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் மாரீசன். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவானதற்கு காரணமே வடிவேலு - பகத் பாசில் கூட்டணி தான். ஏனெனில் இதற்கு முன்னர் அவர்கள் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் வெற்றிக்கு பின் இருவரும் இணைந்து நடித்திருப்பதால் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் எகிற ஆரம்பித்தது. இந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைக்கும் அளவுக்கு இப்படத்தின் டிரெய்லரும் அமைந்திருந்தது.
மாரீசன் திரைப்படத்தில் வடிவேலு வேலாயுதம் என்கிற கேரக்டரிலும், பகத் பாசில் தயா என்கிற ரோலிலும் நடித்துள்ளனர். கதைப்படி வடிவேலு மறதி நோய் உள்ளவர். ஒருநாள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது பின்-ஐ மறந்துவிடுகிறார். திருடனான பகத் பாசில் அப்போது அங்கு வந்து வடிவேலுவிடம் அதிக பணம் இருப்பதை அறிந்ததும், அதை எப்படியாவது அபேஸ் செய்ய முடிவெடுத்து அவரை பைக்கில் அழைத்து செல்கிறார். இந்த பயணத்தின் போது என்ன ஆனது? வடிவேலுவிடம் இருந்து பகத் பாசில் பணத்தை திருடினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.
படத்தின் கதை சூப்பராக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் கோட்டை விட்டுள்ளனர். இதனால் மாரீசன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு போதுமான புரமோஷன் செய்யாததும் அதன் சுமார் வரவேற்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு போட்டியாக வெளிவந்த தலைவன் தலைவி படக்குழு செய்த புரமோஷனில் 10 சதவீதம் கூட மாரீசன் படத்திற்கு செய்யப்படவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கி உள்ளது மாரீசன் திரைப்படம். அப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
மாரீசன் திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் வெறும் ரூ.75 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. பகத் பாசில் - வடிவேலு என இரு திறமைவாய்ந்த நடிகர்கள் நடித்திருந்தும் இப்படம் எடுபடவில்லை. இதற்கு போட்டியாக வெளிவந்த தலைவன் தலைவி திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூலித்திருக்கிறது. அதில் பாதி வசூல் கூட மாரீசன் படத்திற்கு கிடைக்கவில்லை. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் மாரீசன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.