ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கியது அமெரிக்க யூதர்கள் அமைப்பு

31 ஆவணி 2025 ஞாயிறு 10:07 | பார்வைகள் : 856
உக்ரைன் மோதலுக்கு இந்தியா பொறுப்பல்ல. அமெரிக்க அதிகாரிகளின் தவறான விமர்சனம் தொந்தரவை ஏற்படுத்துகிறது என அமெரிக்க யூதர்கள் அமைப்பு
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரிகளை அமெரிக்க விதித்தது இருநாடுகளுக்கு இடையே இருந்த வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க பிரபலங்கள் இந்தியா மீது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், ''உக்ரைன்-ரஷ்யா போர் அடிப்படையில் மோடியின் போர் தான். ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி போர் இயந்திரத்துக்கு இந்தியா உதவுகிறது. அந்த பணத்தை வைத்து தான் உக்ரைனியர்களை ரஷ்யா கொன்று குவிக்கிறது'' என அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியிருந்தார். இதற்கு அமெரிக்க யூதர்கள் அமைப்பு (American Jewish Committee) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு கூறியிருப்பதாவது: உக்ரைன் மோதலுக்கு இந்தியா பொறுப்பல்ல, அமெரிக்க அதிகாரிகளின் விமர்சனம் தொந்தரவை ஏற்படுத்துகிறது. அமெரிக்க-இந்தியா உறவுகளை மீட்டமைக்க எடுக்க வேண்டும்.
அமெரிக்க அதிகாரிகளால் இந்தியா மீதான விமர்சனங்கள் கவலை அடைய செய்கிறது. இந்தியா ரஷ்ய எண்ணெயை நம்பியிருப்பதற்கு நாங்கள் வருந்துகிறோம். ஆனால் புடினின் போர்க்குற்றங்களுக்கு இந்தியா பொறுப்பல்ல. இவ்வாறு அமெரிக்க யூதர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.