Paristamil Navigation Paristamil advert login

திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்

திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில்  8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்

13 புரட்டாசி 2025 சனி 15:49 | பார்வைகள் : 148


திருச்சியில் தொடங்கினால் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின், 'மக்கள் சந்திப்பு பிரசாரம்' திருச்சியில் இன்று (செப் 13) தொடங்கியது. முன்னதாக திருச்சி விமான நிலையம் வந்த விஜய்க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து 5 மணி நேரத்திற்கு பிறகு பிரசார கூட்டம் நடக்கும் இடத்திற்கு விஜய் வந்தார்.

மரக்கடை அருகே எம்ஜிஆர் சிலை அருகே பிரசார கூட்டத்தில் விஜய் பேசியதாவது:

எல்லோருக்கும் வணக்கம். அந்த காலத்தில் போருக்கு போகும் முன்பு, போரில் ஜெயிப்பதற்காக, குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு தான் போருக்கு போவார்கள். அந்த மாதிரி அடுத்த வருடம் நடக்க போகும் ஜனநாயக போருக்கு தயாராகும் முன்பு, நம் மக்களை, உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம் என்று வந்து இருக்கிறேன்.

திருப்பு முனை

ஒரு சில மண்ணை தொட்டால் ரொம்ப நல்லது. சில நல்ல காரியங்களை இந்த இடத்தில் இருந்து தொடங்கினால் ரொம்ப நல்லது என்று பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம், அந்த மாதிரி திருச்சியில் தொடங்கினால் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. 1956ம் ஆண்டு அண்ணாதுரை முதலில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்த இடம் திருச்சி தான்.

சொன்னீங்களே செஞ்சீங்களா?

அதற்கு பிறகு, 1974ம் எம்ஜிஆர் முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது. மலைக்கோட்டை இருக்கிற இடம், கல்விக்கு பெயர் போன இடம், மதச்சார்பின்மைக்கும், நல்லிணகத்திற்கும் பெயர் பெற்ற இடம், கொள்ளை உள்ள மண் இது. அதுமட்டுமல்ல இன்றைக்கு உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது, மனசுக்குள் பரவசம், எமோஷனல் வருகிறது. காஸ் சிலிண்டருக்கு மானியம் தரேன்னு சொன்னீங்களே செஞ்சீங்களா?

ஓட்டு போடுவீர்களா?

டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்போம் என்றீர்களே செஞ்சீங்களா?கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இலவசமாக பஸ்ஸை விட்டு விட்டு ஓசியில் போகிறார்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி எல்லாம் அசிங்கப்படுத்துவதற்கு செய்யாமல் இருக்க வேண்டியது தானே? வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? இவ்வாறு விஜய் பேசினார்.

தொழில்நுட்ப கோளாறு

விஜய் தேர்தல் பிரசாரத்தில் பேசிய இடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை. இதனால் 8 மணி நேரமாக காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள்  விஜயின் பேச்சை கேட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்