Paristamil Navigation Paristamil advert login

இந்தியா உடனான மோதலை நிறுத்த யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை ! பாகிஸ்தான்

இந்தியா உடனான மோதலை நிறுத்த யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை !  பாகிஸ்தான்

17 புரட்டாசி 2025 புதன் 06:18 | பார்வைகள் : 148


பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலுக்கு எந்த மூன்றாம் தரப்பும் மத்தியஸ்தம் செய்ய இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

கடந்த ஏப்ரலில் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதில், 26 பேர் பலியாகினர். இதையடுத்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் பெயரில் நம் ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 11 பாகிஸ்தான் விமான தளங்கள் அழிக்கப்பட்டன.

இதையடுத்து, இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பை நம் படைகள் ஏற்படுத்தின. இந்தியாவின் தாக்குதலை தாங்கமுடியாத பாகிஸ்தான் அமெரிக்காவின் வாயிலாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு இந்தியா, இரு நாட்டுக்கு இடையேயான பிரச்னைக்கு மூன்றாம் தரப்பு தலையீட்டை திட்டவட்டமாக நிராகரித்தது. இதையடுத்து, இருநாட்டு தலைவர்களிடையேயான பேச்சை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர், செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஆப்பரேஷன் சிந்துாரில் மோதலை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா ஒரு நடுநிலையான இடத்தில் பேச்சு நடத்த போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்தது. ஆனால், மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது. வெளிநாட்டு தலையீட்டை பாகிஸ்தான் எதிர்க்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுடனான பிரச்னைகளை இருதரப்பு அடிப்படையிலேயே கண்டிப்பாக கையாளப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கொள்கையில் உறுதியாக இருந்தது.மோதலை கைவிடுவதற்கான பேச்சுக்கு ஏற்பாடுகள் செய்யுமாறு நாங்கள் அமெரிக்காவிடமோ, வேறு எந்த நாட்டிடமோ கேட்கவில்லை.

போர் நிறுத்தக் கோரிக்கை பாகிஸ்தானிடம் இருந்துதான் வந்தது. இரு தரப்பு இடையேயான பேச்சு, மோதல் குறித்து மட்டுமின்றி விரிவானதாக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பியது. பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நாங்கள் முன்னர் விவாதித்த அனைத்து விஷயங்களையும் குறித்தும் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், பேச்சில் ஈடுபடுமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்த முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு தன் தனிப்பட்ட தலையீடுதான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். இதுவரை 40க்கும் மேற்பட்ட முறை இதை கூறியுள்ளார். இருப்பினும், இந்தியா தொடர்ந்து இதை மறுத்து வந்துள்ளது. எந்த ஒரு மூன்றாம் தரப்பு தலையீடும் இதில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அமெரிக்காவின் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்து விட்டதாக தொடர்ந்து விமர்சித்து வந்தன.இந்நிலையில் இஷார் தரின் கருத்துக்கள், மத்திய அரசின் நிலைப்பாட்டை தற்போது உறுதிபடுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்