இலங்கையில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு - கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை

19 ஆவணி 2025 செவ்வாய் 09:47 | பார்வைகள் : 162
புத்தளத்தில் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தகுடாவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்ட நபருக்கும் மேலும் நான்கு நபர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது நான்கு நபர்களும் இணைந்து கொலை செய்யப்பட்ட நபரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.