ஜம்மு-காஷ்மீரில் பெருவெள்ளம்!: நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி

28 ஆவணி 2025 வியாழன் 14:25 | பார்வைகள் : 160
ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 38 செ.மீ., மழை கொட்டித் தீர்த்ததை அடுத்து, முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்களில், 41 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. ஜம்முவில் மட்டும் ஒரே நாளில் 38 செ.மீ., மழை பதிவானது.
கனமழையால், தாழ்வான பகுதிகளிலும், வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால், யூனியன் பிரதேசம் முழுதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மரங்கள் முறிந்தன கனமழை வெள்ளத்தில் சாலைகள் மற்றும் முக்கிய பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பெரும்பாலான பகுதிகள் தீவுகளாக மாறின. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
பாதிக்கப்பட்ட பகுதி களில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்களாக இடைவிடாமல் கொட்டிய மழையால், ஜம்மு - காஷ்மீரில் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
ஜீலம், செனாப், தாவி, பசந்தர் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டனர்.
ஜீலம் நதியில் இருந்து வெளியேறிய தண்ணீர், அனந்த்நாக், ஸ்ரீநகர் பகுதிகளில் குடியிருப்புகளில் புகுந்தது. இதனால், அங்கு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் ரப்பர் படகு வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
வீடுகளில் மேல்தளங்களில் சிக்கியோருக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கத்ராவிலிருந்து வைஷ்ணோ தேவி கோவிலுக்கு செல்லும் வழியில், அர்த்குவாரியில் கனமழையால் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது.
கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பலர் இதில் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவுபகலாக தொடர்கிறது.
நிலச்சிரிவில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டவர்கள் சேதம் கனமழையால், ஜம்மு - காஷ்மீர் முழுதும் ஏராளமான கட்டடங்கள், மொபைல்போன் டவர்கள் சேதமடைந்துள்ளன. இதனால், பெரும்பாலான பகுதிகளில் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.
மின்கம்பங்கள் முறிந்ததால் மின் இணைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
கிஷ்த்வார் மாவட்டத்தின் தொலைதுார மார்கி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் முக்கிய பாலம் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை குறைந்ததை அடுத்து, ஜம்முவில் இருந்து நேற்று இயக்கப்பட்ட ஆறு ரயில்கள், மண் அரிப்பு மற்றும் வெள்ளம் காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, ஜம்மு மற்றும் கத்ரா ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து செல்லும் 58 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில், மழை வெள்ளம் காரணமாக, 60க்கும் மேற்பட்ட ரயில்கள் குறுகிய துாரம் மட்டும் இயக்கப்பட்டன.
நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் - கிஷ்துவார் - தோடா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக ஜம்மு - காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால், மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லாவை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு - காஷ்மீருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தார்.
மழை மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.