Paristamil Navigation Paristamil advert login

விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி

விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி

3 ஐப்பசி 2025 வெள்ளி 13:37 | பார்வைகள் : 109


தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி பற்றி, சி.ஆர்.பி .எப்., அதிகாரிகளிடம், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

த.வெ.க., தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 11 பேர், 24 மணி நேரமும் விஜயின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

'ஒய்' பிரிவு பாதுகாப்பை மீறி, சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீட்டிற்குள், சில தினங்களுக்கு முன், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த அருண், 24 என்பவர் புகுந்தார். இது, விஜய் வீட்டில் பாதுகாப்பு குளறுபடி இருப்பதை, அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த செப்., 27ல், கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர். விஜய் மீதும் செருப்பு வீசப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. இக்கூட்டத்திலும் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்துள்ளன.

தொடர்ந்து, விஜய்க்கான பாதுகாப்பு பணியில் குளறுபடிகள் நீடிப்பதால், அது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்களிடம், டில்லியில் இருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்